தெஹ்லான் பாகவி.. வி.ஜி. சந்தோஷம், சித்தராமையா உள்ளிட்ட 6 பேருக்கு விசிக விருது.. திருமாவளவன் அதிரடி
தெகலன் பாகவி, சித்தராமையா உள்ளிட்ட 6 பேருக்கு விருது அறிவித்துள்ளார் திருமாவளவன்
சென்னை: விசிக இந்த வருடத்திற்கான விருதுகள் வழங்கும் விழாவை அறிவித்துள்ளது.. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு வருடமும், தமிழகம் மற்றும் இந்திய அளவில் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு விசிக சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த 2021ம் ஆண்டும் விழா எடுத்து விருதுகள் வழங்கப்பட்டன.. அதில், "அம்பேத்கர் சுடர்" விருதினை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கியிருந்தது விசிக.
திருமாவளவன்
பல பத்தாண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று "பண்டிதர் அயோத்திதாசர் " நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் மணிமண்டபம் அமைக்கப்படுமெனவும், பஞ்சமி நிலங்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் முதல்வர் அறிவிப்பு செய்திருந்ததாலும், மேலும், அவருடைய பல அரும்பணிகளைப் பாராட்டி "அம்பேத்கர் சுடர்" விருதினை விசிக வழங்கி பெருமைப்படுத்தியிருந்தது.
காயிதே மில்லத்
அதேபோல, பெரியாரின் வழியில் சமூகநீதிக்காகத் தொடர்ந்து பாடாற்றிவரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைப் பாராட்டி அவருக்கு " பெரியார் ஒளி " விருதினை வழங்கி கௌரவித்தது.. காமராசர் கதிர் விருது நெல்லை கண்ணனுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது பி.வி.கரியமாலுக்கும், காயிதேமில்லத் பிறை விருது, அல்ஹாஜ் மு.பஷீ்ர் அகமதுவுக்கும், செம்மொழி ஞாயிறு விருது செம்மொழி க.இராமசாமி'க்கும் வழங்கி பெருமைப்படுத்தியிருந்தது.
திருமாவளவன்
இந்நிலையில், இந்த வருடத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு பற்றி அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சொன்னதாவது: ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபட்டு வரும் தலித் அல்லாத சான்றோரை போற்றும் வகையில் அம்பேத்கர் பெயரில் 'அம்பேத்கர் சுடர்' என்னும் விருது முதன்முதலில் 2007-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது. பின்னர் 2008-ம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர் விருதுடன், பெரியார் ஒளி, அயோத்திதாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதே மில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளும் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த சான்றோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
கார்ல் மார்க்ஸ்
இந்த ஆண்டு முதல் மாமேதை கார்ல் மார்க்ஸ் மாமணி விருது புதியதாக வழங்கப்படுகிறது... அந்த விருதுகளை பெறுவோருக்கு பாராட்டு பட்டயம் நினைவு கேடயம் ஆகியவற்றுடன் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. விளிம்புநிலை மக்களுக்காக பாடுபடுவோரை ஊக்கப்படுத்துவதும், தலித் அல்லாத ஜனநாயக சக்திகளை அடையாளப் படுத்துவதும், தலித் மற்றும் பிற சமூகத்தினருக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதும், சமூகநீதிக்கும், தமிழ்மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரை சிறப்பிப்பதும் விடுதலை சிறுத்தைகளின் கடமை என்கிற வகையில் இவ்விழா ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.
நாராயணசாமி
கடந்த 15 வருடங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பொது உடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 85 சான்றோருக்கு இதுவரை இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா வருகிற 30-ந்தேதி கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
வி.ஜி. சந்தோஷம்
இந்த ஆண்டிற்கான விருதுகள் கர்நாடகா முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா, எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, வி.ஜி. சந்தோசம், செல்லப்பன், தெகலான் பாகவி, கா.ராசன், மறைந்த எழுத்தாளர் ஜவகர் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன" என்றார்.. திருமாவளவன் தலைமை தாங்க உள்ள இந்த விழாவுக்கு, பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்... விருதுகள் வழங்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.