கண்டமேனிக்கு போஸ்ட் போட்டா.. இப்படித்தான்... "நறுக்"குன்னு தலையில் கொட்டு வைத்த ஹைகோர்ட்..!
எஸ்வி சேகருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது
சென்னை: "படித்தவரா நீங்க.. சமூகத்தில் முக்கியப் பிரமுகரா நீங்கெல்லாம்".. இப்படி பச்சையாகவே கேட்டு விட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
சமூக வலைதளங்களை தவறான பிரசாரத்திற்குப் பயன்படுத்துவோருக்கு ஆழமான கொட்டாக இது வந்து சேர்ந்துள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் குறித்த தவறான பேஸ்புக் பதிவை பார்வர்ட் செய்து போஸ்ட் போட்டு மாட்டிக் கொண்டார் எஸ்வி சேகர்.
2018ம் ஆம்டு இந்த சம்பவம் நடந்தது. அதுதொடர்பாக கடும் கண்டனங்கள் எழுந்தன. பெண் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்திப் பார்த்தனர். ஆனாலும் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதே தவிர கைது செய்யப்படவில்லை, வேறு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எஸ்வி சேகர்
அவர் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை எதிர்த்து ஹைகோர்ட்டுக்குப் போனார் எஸ்.வி.சேகர். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது எஸ்வி சேகரை கடுமையாக கண்டித்தது ஹைகோர்ட்... "நீங்கெல்லாம் எப்படி முக்கியப் பிரமுகர் என்று கூறிக் கொள்கிறீர்கள், படித்தவர்தானே.. படித்துப் பார்க்காமல் எப்படி ரீ போஸ்ட் செய்ய முடியும். சமூகத்தை நீங்கள் மதிக்க வேண்டாமா" என்று சற்று காட்டமாகவே கேட்டுள்ளது ஹைகோர்ட்.
இழிவு
உண்மையில் இவர் மாதிரிதான் நிறையப் பேர் உள்ளனர். படித்தவர்களாகவே இருந்தாலும் பெண்களை தரக்குறைவாக பேசுவது, இழித்துப் பேசுவது, எதற்கெடுத்தாலும் தாயைப் பழிப்பது, அசிங்கமாக பேசுவது என்று ஒரு பழக்கமாகவே வைத்துள்ளனர். பெண்களை இழிவாக பேசுவதை பலரும் பழக்கமாக வைத்துள்ளனர். பொது வெளியில் வைத்து ஒருவரின் தாயை பழிப்பது என்ன மாதிரியான புத்தி என்று தெரியவில்லை. அதை விட முக்கியமாக பெண்களை ஏன் இப்படி பேச வேண்டும் என்றும் புரியவில்லை.
அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகளிடையேதான் இந்த கெட்ட பழக்கம் மிக மிக மோசமாக உள்ளது. சினிமா நடிகர்களின் ரசிகர்கள் கூட திருந்தி விடுவார்கள் போல. ஆனால் இந்த அரசியல்வாதிகள் சுட்டுப் போட்டாலும் திருந்த மாட்டார்கள் என்றுதான் தெரிகிறது. சமீபத்தில் கூட பெண்களை இழிவுபடுத்தியதாக ஆ.ராசா மீது கடும் கண்டனங்கள் எழுந்தன.
வார்த்தை
பேசும்போது என்ன பேசுகிறோம், என்ன வார்த்தையை பயன்படுத்துகிறோம் என்று யாருமே யோசிப்பது இல்லை. குறிப்பாக மெத்தப் படித்தவர்கள் யோசிப்பதே இல்லை. காரணம் அவர்கள் சார்ந்த கட்சிகள் துணை நிற்கும் என்ற மமதை அல்லது அதிகார போதை. இதை வைத்துக் கொண்டு காட்டுத்தனமாக பேசுவதை பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
எதிர்பார்ப்பு
இதுபோன்றவர்களுக்கெல்லாம் ஹைகோர்ட் நல்ல குட்டு வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதேசமயம், இதுபோன்ற அவதூறாகப் பேசுபவர்களை கடுமையாக தண்டித்தும் ஹைகோர்ட் இதுபோன்ற ஆபாச அரசியல்வாதிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதே அப்பாவிப் பெண்களின் மிக மிக சாதாரண எதிர்பார்ப்பாக உள்ளது.