திமுக எம்எல்ஏவின் மிரட்டல்.. ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின்.. டிடிவி தினகரன் கொதிப்பு
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தனியார் நிறுவனத்தை மிரட்டிய விஷயத்தில் ஆதாரம் இருந்தும் திமுக எம்எல்ஏ எஸ்ஆர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தயங்குவது ஏன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மால்ரோசா புரத்தில் பூஜாகோயல் என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனம் குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உரிமையாளர் பூஜா கோயல் குத்தகை காலம் முடியும் முன்பு நிறுவனத்தை விட்டு வெளியேறும்படி நிறுவன நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். இதற்கு அவர்கள் மறுத்துள்ளனர்.
கை, கால்களை உடைச்சிடுவேன்.. கார் நிறுவனத்தில் மிரட்டல்.. தாம்பரம் திமுக எம்எல்ஏ ராஜா மீது வழக்கு
திமுக எம்எல்ஏ மிரட்டல்
இதையடுத்து பூஜாகோயல், திமுகவை சேர்ந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்ஆர் ராஜா உடன் சென்று நிறுவன அதிகாரிகளிடம் பேசி வெளியேற கூறினார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. எம்எல்ஏ தகாத வார்த்தைகளில் பேசி திட்டி மிரட்டியுள்ளார். கை, காலை உடைத்துவிடுவேன் என கூறினார். இதுதொடர்பான வீடியோ வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
போலீஸ் வழக்குப்பதிவு
இந்தநிலையில், எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் மறைமலைநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எம்எல்ஏ தரப்பில், ‛‛அவர்கள் வீடியோவை கட் செய்து வெளியிட்டுள்ளனர் எனக்கூறப்பட்டுள்ளது. அதிமுக, பாஜக உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் திமுக எம்எல்ஏ எஸ்ஆர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
டிடிவி தினகரன் எதிர்ப்பு
அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திமுக எம்எல்ஏவை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: எதற்காக திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினோமோ அதெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து கொண்டிருக்கின்றன.
தயங்குவது ஏன்?
மக்களை மிரட்டுவது, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களை காலி செய்ய சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட திமுகவின் அராஜகம் அக்கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளின ஆரம்பித்து சட்டப்பேரவை உறுப்பினர் வரை வந்து நிற்கிறது. தாம்பரம் திமுக எம்எல்ஏவின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?'' என விமர்சனத்தோடு கேள்வி எழுப்பி உள்ளார்.