கிளப்ஹவுஸில் இப்படியும் ஒரு நிகழ்வு! 6 மணி நேரம் தொடர்ந்து நடந்த திருக்குறள் முற்றோதல்!
சென்னை: கிளப்ஹவுஸ் சமூக ஊடகத்தில் இயங்கும் திருக்குறள் பகிர்வோம் எனும் ஒரு தமிழ் ஆர்வலர்கள் குழு நாள்தோறும் காலை 7 மணிக்கு திருக்குறளை பதிவிட்டு குறள் சிந்தனைகளை பரப்பி வருகின்றனர். அதில் ஒவ்வொரு நாளும் விருப்பப்பட்டவர்கள் பங்கேற்று திருக்குறளை பொருளுடன் பகிர்வார்கள்.
அதைத் தொடர்ந்த விவாதங்களும் நடைபெறும். இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக திருக்குறளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
இதில் தமிழுக்கும் திருக்குறளுக்கும் தொண்டாற்றிய ஆளுமைகளை பற்றி உரையாற்றும் முனைவர் துரைமுருகன், 1330 திருக்குறளுக்கும் புதுக்கவிதை எழுதி, வாசித்துவரும் கவிஞர் மருது பாண்டியன், திருக்குறளை அசை சீர் என பிரித்து இலக்கண பதிவு செய்துவரும் தமிழாசிரியர் புனிதா வள்ளுவமும் வரலாறும் என்ற தலைப்பில் திருக்குறளையும் வரலாற்றையும் இணைத்து பதிவிட்டு வரும் "கதை பாட்காஸ்ட்" கவிதா, திருக்குறளை இனிய மெல்லிசை வடிவில் பதிவு செய்யும் காவ்யா, செப்பலோசையில் திருக்குறளை ஓதுவதும், குறள் விடு தூது மற்றும் திருவள்ளுவ மாலையை பகிரும் அரவிந்த் கே சாமி, திருக்குறளின் கருப்பொருள் ஆய்ந்து விவாதங்களை முன்னெடுக்கும் தாமு, மொத்த நிகழ்வையும் எழுத்து வடிவில் தொகுத்து வழங்கும் நந்தினி, திருக்குறளை பதம் பிரித்து சுவைபட தமிழ் இலக்கியத் தரவுகளுடன் விளக்கவுரை தரும் பேராசிரியர் அர்த்தநாரி, திருக்குறள் கவனகர் எல்ல்லப்பன், ஆச்சர்யம் நிறைந்த கவனக நிகழ்வு மற்றும் நிறைய ஆர்வலர்கள் உடன் இவ்வவை ஒவ்வொரு நாளும் இனிதே நடைபெறுகிறது.
இவை மட்டுமன்றி, தினமும் மழலைச் செல்வங்களான யுவஸ்ரீ, நிலா, சுபிக்ஷா, ஹாசினி மற்றும் சாரங்கன் ஆகியோரின் மழலை மொழிகளிலும் திருக்குறள் ஒலிப்பது அவையின் கூடுதல் சிறப்பு. இந்தக் குழுவின் நூறாவது நாள் நிறைவு விழாவாக செப்டம்பர் 19-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
முற்றோதல் என்பது திருக்குறளின் 1330 குறளையும் முழுமையாக ஓதும் நிழகழ்வாகும். இந்நிகழ்வில் மழலைகள், சிறார்கள் உட்பட அனைத்து வயதினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .இதில் திருக்குறள் கவனகர் எல்லப்பன் தம்முடைய மாணவர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் திருக்குறள் கவனகர் எல்லப்பனுக்கு "திருக்குறள் செம்மல்" என்ற சிறப்பு பட்டமும் வழங்கப்பட்டது.
அடையாறு மாணவர் நகலக இயக்குநர் சௌரிராஜன், பேராசிரியர் அர்த்தனாரி, ஜாகிர் உசேன் அவர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி மொத்தம் 6 மணி நேரம் நடைபெற்றது. இணையத்தில் திருக்குறள் முற்றோதல் நிகழ்வு வெற்றிகரமாக நிகழ்த்த பட்டது இதுவே முதல் முறையாகும்.