1000 ரூபாய் கொடுப்பதற்கு பதில் பொங்கல் பரிசே இல்லை என்று சொல்லியிருக்கலாம் -தமிழ் மாநில காங்கிரஸ்
சென்னை: பணத்தை யாரும் வீணாக செலவழிக்கமாட்டார்கள் எனவும் அதனால் பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.1000க்கு பதில் ரூ.2500 தர வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், 1000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை என அறிவித்ததற்கு பதில் , பொங்கல் இல்லை என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாம் என விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணிச் செயலாளர் யுவராஜ் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

பொங்கல் பண்டிகை
2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மக்கள் அதிர்ச்சி
இந்த பொங்கல் பரிசு அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதற்கு பதில் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. சென்ற வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தி.மு.க அரசு அறிவித்தது. இதனை பார்த்து பொதுமக்கள் ஆர்வத்துடன் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கினர். ஆனால் பொருட்களின் தரத்தை பார்த்தபிறகு மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். புழுவுடன் உள்ள அரிசி, வெல்லம் என்ற பெயரில் பிசின் போன்ற ஒரு பொருளை அடைத்து கொடுக்கப்பட்டதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பொங்கல் பரிசு 2500 ரூபாய்
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்த போது, கூடுதலாக 5000 கொடுக்க வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் முன்வைத்திருந்தார். கொரோனா காரணமாக பெருமளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விலைவாசி ஏற்றம், பருவ மழையின் தாக்கத்தால் பயிர் சேதம் என பல்வேறு சிக்கலில் சிக்கி இருக்கும் மக்களுக்கு வெறும் 1000 ரொக்கம் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை அறிவித்ததற்கு பதில் , பொங்கல் இல்லை என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.

ஏமாற்றம் தரும் பொங்கல்
அரசு தருகின்ற பணத்தை யாரும் வீணாக செலவு செய்யப் போவது கிடையாது. அனைவரும் குழந்தைகளுடைய படிப்பு செலவு அல்லது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இந்த பணம் பயன்படப் போகிறது. ஆனால் திராவிட மாடல் திராவிட மாடல் என்று கூறிக் கொள்ளும் இந்த திமுக அரசு அறிவித்துள்ள வெறும் ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை அரசின் அறிவிப்புக்கு காத்திருந்த வாக்களித்த மக்களுக்கு 2023 பொங்கல் ஏமாற்றம் தரும் பொங்கலாக மாறியுள்ளது.











Click it and Unblock the Notifications