நில வழிகாட்டி மதிப்பை 200% உயர்த்த தமிழக அரசு திட்டம்! தமிழ் மாநில காங்கிரஸ் வீசும் புது குண்டு!
சென்னை: நில வழிகாட்டி மதிப்பை 200% வரை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வீடு கட்ட நினைப்பதும், விவசாய நிலம் வாங்க நினைப்பதும் கனவாகிவிடும் என அக்கட்சி கூறியிருக்கிறது.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி செயலாளர் யுவராஜ் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

அதிமுக ஆட்சி
தமிழகத்தில் 2012-ல் அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு ஒட்டு மொத்தமாக சீரமைக்கப்பட்டது. இதில் காணப்பட்ட குறைபாடுகளை சரி செய்து, 2017ல் அதிமுக அரசு மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற உயர்த்த நோக்கத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, 33 சதவீதம் குறைத்தது.

நில வழிகாட்டி மதிப்பு
இது நடந்து 5 ஆண்டுகளான நிலையில், வழிகாட்டி மதிப்புகளை ஒட்டுமொத்தமாக சீரமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை, பதிவுத்துறை துவக்கியுள்ளது. பதிவுத் துறையில் முறையாக, மாநில, மாவட்ட அளவில் கமிட்டி அமைத்து, வருவாய் துறை ஆலோசனையுடன் வழிகாட்டி மதிப்புகளை உயர்த்துவது வழக்கம். ஆனால் தற்போது வழிகாட்டி மதிப்பு, 200 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.

உதாரணம் இது
உதாரணமாக, ஒரு கிராமத்தில் 1 ஏக்கர், 4 லட்சம் ரூபாய் என வழிகாட்டி மதிப்பில் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த நில உரிமையாளர், வங்கிக் கடன் பெறும் நோக்கத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு 1 ஏக்கர் கைமாறுவதாக பத்திரம் பதிவு செய்து இருப்பார். இதை அடிப்படையாக வைத்து, புதிய வகைப்பாட்டை உருவாக்கி, அந்த பகுதியில் அனைத்து சொத்துக்களுக்கும், ஏக்கர், 10 லட்சம் ரூபாயாக வழிகாட்டி மதிப்பு மாற்றப்படுகிறது.

200% உயர்த்த திட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது. சொத்து வரி, மின் கட்டண உயர்வு என அடுத்தடுத்து மக்களை திமுக அரசு வஞ்சிக்கிறது. ஏற்கனவே பொருளாதார ரீதியாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் அரசு நில வழிகாட்டி மதிப்புகளை, 200 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது கண்டிக்கத்தக்கது.

பஞ்சாப் போல்
இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வீடு கட்ட நினைப்பதும், விவசாய நிலம் வாங்க நினைப்பதும் கனவாகிவிடும். இதே நமது நாட்டில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு விவசாயி தனது அருகில் உள்ள நிலத்தை வாங்க வேண்டுமானால் அவர் பத்திர பதிவு கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும் நில வழிகாட்டுதல் மதிப்பை அவர் கட்ட தேவையில்லை. அதுபோன்று மக்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த அரசு ஏதாவது நல்லது செய்யாமல் மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. இனியாவது வாக்களித்த மக்களுக்கு வஞ்சனைகள் செய்யாமல் இருக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications