நாலு கால் பாய்ச்சல் வளர்ச்சியா? எல்காட் இருக்கு.. கெல்ட்ரான் எதுக்கு? ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை
சென்னை: அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி! என பதிவிட்டிருந்த முதலமைச்சர் முக ஸ்டாலினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் கட்டமைப்பை ஏற்படுத்தி வருவதாக தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து வருகிறது.

தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களும் உருவாக்கப்பட்டு இருக்கிறது அந்த வகையில் நான் முதல்வன் திட்டம் புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கல்வி திட்டங்கள்: மேலும், உயர் தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்க 8,000 க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள 6000 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், மாநில வளர்ச்சிக்கோ, மக்கள் நலனுக்கோ எந்தத் திட்டங்களையுமே செயல்படுத்தாமல், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல், வெறும் விளம்பரங்களை வைத்தே ஓட்டிக் கொண்டிருக்கும் ஸ்டிக்கர் மாடல் திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்,… https://t.co/gM88uBhWQM
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) May 31, 2024
முக ஸ்டாலின்: இது குறித்த செய்திகளை இன்று பல செய்தித்தாள்கள் வெளியிட்டிருந்தன. இந்த செய்திகளை குறிப்பிட்டு திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் கல்வித்துறை கண்டுள்ள நாலு கால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளை சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
நாலுகால் பாய்ச்சல்: அதில்,” திராவிட மாடல் அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி! 20,332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி, 519.73 கோடி ரூபாயில் உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள், 22,931 'Smart' வகுப்பறைகள், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு. நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது! பயணத்தைத் தொடர்வோம்! தமிழ்நாட்டை உயர்த்துவோம்! ” என குறிப்பிட்டிருந்தார்.
அண்ணாமலை: இந்நிலையில் முதலமைச்சரின் இந்த பதிவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அவரது பதிவில்,”ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், மாநில வளர்ச்சிக்கோ, மக்கள் நலனுக்கோ எந்தத் திட்டங்களையுமே செயல்படுத்தாமல், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல், வெறும் விளம்பரங்களை வைத்தே ஓட்டிக் கொண்டிருக்கும் ஸ்டிக்கர் மாடல் திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், மீண்டும் ஒரு முறை மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட முயன்று அம்பலப்பட்டிருக்கிறார்.
மத்திய அரசின் நிதி: பள்ளிக் கல்வி முன்னேற்றத்துக்கான மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதி ரூ.5,858.32 கோடி. திமுகவின் சாதனைகளாக முதலமைச்சர் ஸ்டாலின் காட்டிக் கொள்ள முயற்சிப்பவை அனைத்துமே, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்படி, மத்திய அரசின் நிதியில் நிறைவேற்றப்பட்டவைதான். பள்ளிக் கல்வியில் திமுகவின் ஒரே சாதனை, கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை, இரண்டு ஆண்டுகளாக மழலையர் வகுப்புகளுக்கு வழங்காமல் இருந்ததுதான். உண்மை இப்படி இருக்க, சிறிதும் கூச்சமே இல்லாமல் இவற்றை திமுகவின் சாதனையாகக் காட்டிக் கொள்ள முயற்சிப்பது, நகைப்பை ஏற்படுத்துகிறது.
கெல்ட்ரான்: அதுமட்டுமின்றி, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதியை பயன்படுத்தி, பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்திற்கான ரூ. 1,000 கோடிக்கான ஒப்பந்தத்தை, தமிழக அரசு நிறுவனமான எல்காட் நிறுவனத்துக்கு வழங்காமல், கேரள மாநில அரசு நிறுவனமான கெல்ட்ரான் நிறுவனத்துக்கு வழங்கியதன் பின்னணியை முதலமைச்சர் தெளிவுபடுத்துவாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications