திராவிட மாடல் என்றாலே சிலருக்கு எரிச்சல்! கருப்பு சிவப்பை பிரிக்க முடியாது! முதல்வர் ஸ்டாலின் உறுதி!
சென்னை : திராவிட மாடல் என்றாலே சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது எனவும், கருப்பையும் சிவப்பையும், யாராலும் பிரிக்க முடியாது தமிழினம் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து திராவிடர் கழகம் சார்பில் பரப்புரை பயணம் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த பரப்புரை பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்ற நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திராவிட இயக்கத்தின் கருப்புச்சட்டை போராளிகளின் உழைப்பு வீணாகி விடவில்லை. இதன் அடையாளம் தான் தற்போது நீங்கள் பார்க்கும் திராவிட மாடல் ஆட்சி. திராவிடர் கழகத்தினர் தேர்தல் அரசியலுக்கு வரப்போவதில்லை பட்டம் பதவிகளை எதிர்பார்ப்பதும் இல்லை. ஆனால் அதிகாரத்திற்கு வராமலேயே இன மானம் காக்க கூடிய கருத்தியல் வெற்றியை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.

திராவிட மாடல் ஆட்சி
இந்த திராவிட மாடல் ஆட்சியானது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே முன்மாதிரியான ஆட்சியாக உள்ளது. நம்முடைய சமூக நீதியை, நாம் பேசிய மாநில சுயாட்சியை இன்று வடமாநிலத்தில் இருக்கக்கூடிய பல தலைவர்கள் முதலமைச்சர்கள், பொது மக்கள் பேசத் தொடங்கி இருக்கின்றனர் இதுதான் நமக்கு கிடைத்து இருக்கக்கூடிய வெற்றி.திராவிட சிந்தனை இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்கு கசப்பாக உள்ளது, திராவிட மாடல் என்று சொல்வது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது .

கருப்பு சிவப்பு கொடி
பெரியார் என்ற பெயரை உச்சரித்தாலே சிலருக்கு கோபம் வருகிறது. வெறுப்பை சுமந்து வாழ்பவர்களுக்கு திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஒட்டியிருப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது, கருப்பையும் சிவப்பையும் யாராலும் எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது. திராவிடர் கழக கொடியிலும் திமுகழக கொடியிலும், ஏன் மதிமுக கொடியிலும் கூட இருப்பது கருப்பும் சிவப்பும் தான். நாங்கள் ஒன்றாக இருப்பவர்கள் அல்ல ஒன்றாக கலந்துவிட்டவர்கள்.

பாஜகவும் அதிமுகவும்
பல்கலைக்கழகத்தில் துணை வேந்தரை நியமிக்கக்கூடிய தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி விட்டு தான் வந்திருக்கிறோம். நீட் நாடகம் நடத்தியது போல் இந்த தீர்மானத்தில் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்து வெளிநடப்பு செய்தார்கள். நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து இன்று மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கிறார்கள். எதேச்சாதிகார தால் சாமானியர்களை கட்டுப்படுத்தி விடலாம் என நினைக்கிறார்கள். இது மக்களாட்சி நடைபெறும் நாடு என்பதை பாஜக உணர வேண்டும். மாநிலங்கள் இணைந்தால்தான் ஒன்றியங்கள் என்ற இந்தியா என்பதை மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் உணர வேண்டும்.












Click it and Unblock the Notifications