நல்லரசு என்றால் என்ன தெரியுமா.. எல்ஐசி பங்கு விற்பனை.. மத்திய அரசை சாடும் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: எல்ஐசி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்தத் தவறான முடிவை திரும்பப் பெற்று எல்.ஐ.சி.யைக் காப்பாற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நாட்டிலேயே மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாக உள்ளது எல்ஐசி. இதில் 1.2 கோடிக்கு மேலான முகவர்கள் மற்றும் 25 கோடிக்கும் மேலான பாலிசிதரார்கள் உள்ளனர்.

சர்வதேச அளவில் 3ஆவது மிகப் பெரிய 0காப்பீட்டு நிறுவனமாக உள்ள எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, எல்ஐசி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்து முதற்கட்டமாக ரூ.78 ஆயிரம் கோடி நிதி திட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பொது பங்கு வெளியீட்டிற்கான வரைவு அறிக்கையைப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் எல்ஐசி தாக்கல் செய்துள்ளது.
இந்தச் சூழலில் தவறான முடிவைத் திரும்பப் பெற்று எல்.ஐ.சி.யைக் காப்பாற்ற வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எல்.ஐ.சி நிறுவனம் பல்லாண்டுகளாகப் பலகோடி இந்தியர்களின் தேவைகளை நிறைவுசெய்து, அவர்களின் நன்னம்பிக்கையைச் சம்பாதித்து, தனது திறம்பட்ட செயல்பாட்டால் அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்கியுள்ளது.
அத்தகைய நிறுவனத்தின் பங்குகளில் 5 விழுக்காட்டை விற்பனை செய்ய ஒன்றிய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்திருப்பது தனியார்மயத்தை நோக்கிய - முற்றிலும் விரும்பத்தகாத செயலாகும். இம்முடிவு மக்களின் நலனையோ LIC நிறுவனத்தின் நலனையோ கருதி மேற்கொள்ளப்பட்டதன்று என்பது வெள்ளிடைமலை.
ஒரு நல்லரசு என்பது நிறுவனங்களைக் கட்டியமைக்க வேண்டுமேயன்றி; தொடர் விற்பனையில் ஈடுபடுவதில் மும்முரம் காட்டக்கூடாது. முறையான யோசனையின்றி எடுக்கப்பட்ட இம்முடிவை ஒன்றிய அரசு திரும்பப்பெற்று எல்.ஐ.சி. நிறுவனத்தைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications