பெயரை மாற்றி எழுதும் மருத்துவமனைகள்.. குமுறும் உறவினர்கள்.. கலெக்டர்களுக்கு இறையன்பு அதிரடி உத்தரவு
சென்னை: கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில், உரிய வகையில் நோயாளிகளின் பெயர், வயது, முகவரி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளை சரி செய்யுமாறு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா நோய் பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவமனை வரவேற்பு அறையில் ஊழியர்கள், நோயாளியின் பெயர், வயது, முகவரி உள்ளிட்டவற்றை கேட்டு எழுதுவது வழக்கம்.
பெயர் மாற்றங்கள்
ஆனால் இதில் தவறுகள் ஏற்பட்டால், ஒருவேளை நோயாளி இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு இறப்பு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
குப்பன் என்ற பெயருக்கு பதில் சுப்பன் என்றோ, பீட்டர் என்ற பெயருக்கு பதில், வம்பர் என்றோ பெயரை எழுதி விட்டால் அந்த நோயாளியின் குடும்பத்தின் நிலைமை என்னாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
Recommended Video
இறையன்பு உத்தரவு
இதில் தவறுகள் ஏற்பட்டால் இறப்பு சான்றிதழ் கிடைப்பதில் பெரும் சிக்கல்கள் எழுகின்றன. இந்த நிலையில்தான், தலைமைச் செயலாளர் இறையன்பு ஒரு சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறுகையில், மருத்துவமனை நிர்வாகிகள் நோயாளிகளின் பெயர் முகவரி வயது போன்றவற்றில் தவறுகள் செய்வதாக நோயாளிகளின் உறவினர்கள் அவ்வப்போது புகாரில் தெரிவித்து வருகிறார்கள்.
கலெக்டர்களுக்கு உத்தரவு
இது தொடர்பாக அரசு ஏற்கனவே வழிகாட்டி இருந்தாலும்கூட மருத்துவமனை நிர்வாகங்கள் இன்னமும் தவறு செய்கின்றனர். எனவே ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளில் இதுபோல முறையாக பதிவு செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். சரி செய்ய வேண்டும்.
இறையன்பு
இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் போன்றவை எந்த விதமான தாமதமும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு உடனடியாக கிடைக்க வேண்டும் என்று, அந்த உத்தரவில் இறையன்பு தெரிவித்துள்ளார்.