ஆமா.. ஸ்டாலின் வாக்கிங் போகும் போட்டோக்களை கவனிச்சீங்களா ? கையில் அது என்ன குச்சி? விஷயம் இதுதான்
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று காலை நடைபயிற்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் என பலரிடமும் நின்று பேசி அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
வழக்கமாக சென்னை அடையாறு பகுதியில் உள்ள தியோசிபிகல் சொசைட்டில் நடைபயிற்சி செல்லும் முதல்வர் ஸ்டாலின், இன்று சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபயிற்சி சென்றிருக்கிறார்.
இதனிடையே நடைபயிற்சியின் போது முதலமைச்சர் ஸ்டாலின் கையில் வைத்திருக்கும் குச்சி பற்றி பலரும் ஆராய்ந்து வந்த நிலையில், அது ஒரு மருத்துவகுணமிக்க குச்சி எனத் தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக காலை வேளையில் நடைபயிற்சி செல்லும் வழக்கம் உடையவர். மழை மற்றும் பனி காரணமாக வீட்டிலிருந்தபடியே கடந்த 2 மாதங்களாக டிரெட்மில் மூலம் நடைபயிற்சி சென்ற முதல்வர் ஸ்டாலின் இப்போது வழக்கம் போல் காலார சில கிலோ மீட்டர் தூரம் நடந்து நடைபயிற்சி மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார்.

தினமும் நடைபயிற்சி
முதலமைச்சர் ஸ்டாலின் நடைபயிற்சி செல்லும் போது அவருடன் அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து குழுமங்களின் அதிபர் ராம், ஆகியோர் கட்டாயம் உடனிருப்பார்கள். இந்து ராமுடன் மாநில அரசியல் தொடங்கி தேசிய அரசியல் வரை விவாதித்துக் கொண்டே நடைபயிற்சி செல்வது முதல்வரின் வழக்கம். சென்னை அடையாறு பகுதியில் உள்ள தியோசிபிகல் சொசைட்டியில் அமைதியான சூழலில் நடைபயிற்சி செல்வதை விரும்பும் ஸ்டாலின், இன்று சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபயிற்சி சென்றிருக்கிறார். அதற்கு காரணம் தியோசிபிகல் சொசைட்டியில் சில நிகழ்ச்சி நடைபெற்று வருவதே ஆகும்.

தூய்மைப் பணியாளர்கள்
சென்னை ஐஐடி வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த பணியாளர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து வருவதை பார்த்தவுடன் ஆர்வமாக சென்று அவரிடம் பேசியிருக்கின்றனர். முதல்வரும் முக மலர்ச்சியுடன் சில நிமிடங்கள் அவர்களிடம் நின்று பேசிவிட்டு புறப்பட்டிருக்கிறார். அப்போது முதல்வருடன் தாங்கள் புகைப்படம் எடுக்க விரும்பிய அவர்கள், யாரிடம் போனை கொடுத்து எடுக்கச் சொல்வது என தடுமாறியிருக்கின்றனர். இதனைப் பார்த்த இந்து குழுமங்களின் அதிபர் ராம், தாமே படம் எடுப்பதாக கூறி அவர்களை முதல்வர் அருகில் நிற்க வைத்து படம் எடுத்து கொடுத்திருக்கிறார்.

கையில் என்ன குச்சி
முதலமைச்சர் ஸ்டாலின் நடைபயிற்சி செல்லும் போதெல்லாம் அவரது கையில் மந்திரக்கோல் போன்ற ஒரு குச்சி இருப்பதை பார்த்த பலரும் அது என்ன குச்சி என ஆராய்ந்து வருகின்றனர். பார்ப்பதற்கு மந்திரக் கோல் போன்று காட்சியளிக்கும் குச்சி என்பதால் அது என்னவாக இருக்கும் என்ற கேள்வி கட்சியினருக்கு மட்டுமல்ல மக்களுக்கு ஏற்பட்டது. இதனிடையே இது குறித்து நம்பத்தகுந்த வட்டாரத்தில் விசாரித்த போது, அது வேறொன்றுமில்லை, மருத்துவகுணமிக்க தெரபி குச்சி என்றும் இயற்கை மருத்துவ முறையில் நடைபயிற்சியின் போது முதல்வர் அதை பயன்படுத்துகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ பயன்
இதனிடையே முதல்வர் கையில் உள்ள குச்சி கருங்காலி மரத்தில் செய்யப்பட்டது என்றும் இதில் இயற்கை முறை மருத்துவ குணங்கள் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. இயற்கை சார்ந்த வாழ்வியல் மற்றும் மருத்துவவியல் முறைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னுரிமைக் கொடுக்கிறார் என்பதை மட்டும் இதன் மூலம் உணர முடிகிறது.

அக்குபிரஷர் கோல்கள்
நடைபயிற்சியின் போது முதலமைச்சர் ஸ்டாலின் கையில் இருக்கும் கோல், அக்குபிரஷர் மருத்துவ முறையை அடிப்படையாக கொண்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்கி உடலுக்கு புத்துணர்வு தருவதுடன் சுறுசுறுப்பாக இருக்கவும் இது போன்ற அக்குபிரஷர் கோல்கள் பயன்படுகின்றன. இதனிடையே இந்த அக்குபிரஷர் கோல் உள்ளடங்கிய கிட்கள் எண்ணற்ற டிசைன்களில் ஆன்லைனிலும் விற்பனையாகி வருகிறது. உடல் நலனின் அக்கறையுள்ள பலரும் இதை பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற அக்குபிரஷர் குச்சிகள் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கிறது என அதை பயன்படுத்துவோர் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications