சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிலங்களை விற்பனை செய்த தீட்சிதர்கள்? ஆதாரங்களுடன் தமிழக அரசு அறிக்கை
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக கூறி அதற்கான ஆதாரங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கையாக இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரி இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், சவுந்தர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், " கோயில் நிலங்கள் எதுவும் தீட்சிதர்கள் வசமில்லை. நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக அறநிலையத் துறை கூறும் குற்றச்சாட்டு துரதிருஷ்டவசமானது என வாதம் செய்தார்.
இதைத் தொடர்ந்து அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் 1974, 1985, 1988 ஆம் ஆண்டுகளில் தீட்சிதர்களால் விற்கப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன என கூறி அந்த ஆதாரங்களை தாக்கல் செய்தார். அதில் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் சிறப்பு தாசில்தார் கட்டுப்பாட்டில் எவ்வளவு உள்ளன. கட்டளைதாரர்கள் கட்டுப்பாட்டில் எவ்வளவு இருக்கிறது உள்ளிட்ட விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அறநிலையத் துறை அறிக்கையில் பதில் அளிக்க பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலையத் துறை குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications