மக்கள் பாதுகாப்பு முக்கியம்! ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு! பரபரத்த வாதம்!
சென்னை : தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காத 47 இடங்களில், உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்த பிறகு, வரும் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கபடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், நவம்பர் 6ஆம் தேதியன்று ஊர்வலத்தை நடத்த உத்தரவிட்டதுடன், அதற்கான நிபந்தனைகளை விதித்து, அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
நவம்பர் 6ல் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி! நாளைமறுநாள் போலீஸ் அறிக்கை தாக்கல் செய்யனும்: ஹைகோர்ட்
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு
அவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் பிரபாகர், கடலூர், பெரம்பலூர் கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், மற்ற எந்த இடத்திலும் வழங்கவில்லை என்றும், அனுமதி அளித்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறை அறிக்கையை காட்டி தமிழக அரசு தப்பிக்க பார்ப்பதாகவும், வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளதாகவும் வாதிட்டார். அனைத்து தரப்பு மக்களையும் காப்பதுதான் அரசின் கடமை என்றும் வலியுறுத்தினார். அமைதியான ஊர்வலத்தை யாரும் தடுக்க முடியாது என்றும், அது ஜனநாயக உரிமை என்றும் உறுதிபட தெரிவித்தார்.
தமிழகம் அமைதி பூங்கா
மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி தமிழகம் அமைதி பூங்கா என சொல்லிவிட்டு, பேரணி அனுமதி கேட்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்கிறார்கள் என குற்றம்சாட்டினார். மேலும் ஒரு மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, அனுமதி வழங்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு மற்ற இடங்களில் ஏன் வழங்கவில்லை என காவல்துறை தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.
3 இடங்களில் மட்டும் அனுமதி
காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பங்களில் அனுமதி வேண்டுமென செப்டம்பர் 30ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதை கருத்தில் கொண்டே 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாகவும், மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் பல இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசியலாக்க வேண்டாம்
மேலும், விசிக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் பொதுக்கூட்டம், மனித சங்கிலிக்கு அனுமதி கேட்டதாலேயே அனுமதிக்கப்பட்டதாகவும், ஆர்.எஸ்.எஸ். கேட்பது பேரணிக்கான அனுமதி என்பதால், வழங்க முடியாது என தெரிவித்தார். உள் அரங்கு கூட்டம் என்றால் அனுமதி வழங்குவதில் பிரச்சனை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆர்.எஸ்.எஸ். தரப்பு மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும் என்.ஆர்.இளங்கோ திட்டவட்டமாக தெரிவித்தார்.
நீதிபதி கேள்வி
கோவையை தவிர மற்ற இடங்களில் அனுமதி அளிக்க பரிசீலிக்கலாமே என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளுக்கே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தங்களது உயிரை துச்சமென நினைத்தும், நேரத்தையும் தியாகம் செய்தும் தகவல்களை சேகரிக்கும் உளவுத்துறையினர் தரும் தகவல்களை எப்படி யூகம் அல்லது அனுமானம் என சொல்ல முடியும் எனவும் ஆர்.எஸ்.எஸ். தரப்பிற்கு அவர் கேள்வி எழுப்பினார். அதன்பின்னர் உளவுத்துறையின் அறிக்கையையும் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தாக்கல் செய்தார்.
விசாரணை தள்ளி வைப்பு
ஆனால் ஆர்.எஸ்.எஸ். தரப்பில் உள்ளரங்கு கூட்டமாக நடத்த முடியாது எனவும், பேரணிக்குதான் காவல்துறை அனுமதி வழங்க வேண்டுமெனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், உளவுத்துறை அறிக்கையை பார்த்த பிறகு மீதமுள்ள 47 இடங்களில் அனுமதி வழங்க வேண்டுமா வேண்டாமா என உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (நவம்பர் 4) தள்ளிவைத்துள்ளார்.