அரசாணை 115 சர்ச்சை! மொத்தமாய் திரண்ட கட்சிகள்! கொந்தளித்த அரசு ஊழியர்கள்! தமிழக அரசு திடீர் விளக்கம்
சென்னை : மனிதவள மேம்பாட்டுத் துறை அரசாணை 115க்கு அரசியல் கட்சிகள் மற்றும் அரசு பணியாளர்களிடையே எதிர்ப்பு எழுந்த நிலையில் குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளதாகவும், பணியாளர் சங்கங்களின் கருத்தை கேட்ட பிறகே அரசு முடிவெடுக்கும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை எண். 115 என்ற ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த ஆணையின்படி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆ.கு. பரூக்கி தலைமையில் மனிதவள சீர்திருத்தக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்களை திறன் அடிப்படையில், ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்வது, சி பிரிவு டி மற்றும் சி பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது என இந்த குழு ஆய்வு செய்து 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.

அரசாணை 115
மேலும், வெளி முகமை ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பட்டியலிட்டு, பல்வேறு நிலை மனிதவள அரசுப் பணியிடங்களை, அவற்றைக் கொண்டு நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது போன்ற சில ஆய்வு வரம்புகள் அக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. இளைஞர்களின் எதிர்கால அரசு வேலை என்ற கனவுகளுக்கும், 69 சதவீத இட ஒதுக்கீடு என்ற சமூக நீதிக்கும் மூடுவிழா காண்பதாக இருப்பதாக பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் அரசு பணியாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்தன.

அரசு ஊழியர்கள் எதிர்ப்பு
மேலும் இந்த குழவின் ஆய்வு வரம்புகள் அனைத்தும் ஊழியர் விரோத நடவடிக்கைகளாகவே உள்ளன என அரசுப் பணியாளர்கள் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தும் மனு அளித்தன. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில்,"அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு. மனிதவள சீர்திருத்தக் குழு 18.10.2022 நாளிட்ட அரசாணை (நிலை) எண்.115-ல் மனிதவள மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு விளக்கம்
இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசுப் பணியாளர் சங்கங்கள் மேற்படி சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய கால பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தங்களுடைய கோரிக்கைகளைக் குறிப்பிட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் இன்று (09.11.2022) மனு அளித்தனர்.

ஆய்வு வரம்புகள் ரத்து
அவர்களுடைய கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்ததோடு. இக்குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு. புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications