மூன்றே நாள்... தற்காலிக சட்டசபை அமைக்க... ரூ. 1.20 கோடி அள்ளி தெளித்த தமிழக அரசு!!
சென்னை: நடப்பு வாரத்தின் துவக்கத்தில் கலைவாணர் அரங்கில், மூன்றே நாட்கள் நடந்த தற்காலிக சட்டசபைக்கு தமிழக அரசு ரூ. 1.20 கோடி ரூபாய் செலவிட்டது தெரிய வந்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டம் நடத்துவதற்கு பதிலாக, சென்னை கலைவாணர் அரங்கில், மூன்று நாட்கள் கூட்டத் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து, கலைவாணர் அரங்கில், தற்காலிக சட்டசபை அமைப்பதற்கான அனைத்துப் பணிகளிலும் தமிழக பொதுப்பணித்துறை ஈடுபட்டது. தலைமை செயலகத்தில் இருப்பது போன்றே 10 நாளில் தற்காலிக சட்டசபை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டது. இங்கு கடந்த 14 ஆம் தேதி முதல், 16ஆம் தேதி வரை மூன்று நாட்கள் சட்டசபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக சட்டசபை அமைப்பதற்கு பொதுப்பணி துறை ரூ. 1.20 கோடி செலவு செய்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. மின்விளக்குகள், மின்விசிறி, பெயின்ட் அடித்தல், புதிய அறைகள் உருவாக்கியது ஆகியவற்றுக்கு இந்த நிதி செலவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த, 2011 தி.மு.க., ஆட்சியில், கலைவாணர் அரங்கம் அருகே புதிய சட்டசபை கட்டப்பட்டது. ஆனால், இந்த புதிய கட்டிடத்திற்கு மாறுவதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறுத்துவிட்டார். அந்த கட்டிடத்தை புதிய பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்தார்.
இங்கு சட்டசபை அமைப்பதற்கு என்று புதிதாக மேஜைகள், நாற்காலிகள், ஒலிபெருக்கிகள், மைக்குகள் வாங்கப்பட்டு இருந்தன. இவை அனைத்தும் பொதுப் பணித்துறையின் பாதுகாப்பில் வைத்து இருந்தனர். தற்போது, அவற்றில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அனுமதியுடன், கலைவாணர் அரங்கில் மேஜைகள், மின் விசிறிகள் அமைக்கப்பட்டு இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.