டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி..மேலிட சந்திப்பின் பின்னணி தகவல்கள்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாட்கள் பயணமாக இன்று டெல்லி செல்ல உள்ளதாக ராஜ்பவன் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் சந்தித்து தமிழக நிலவரம் குறித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக ஆளுநருக்கு எதிராக ஆளும் திமுக அரசு பல எதிர்ப்பு நிலையை எடுத்து வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்களுக்கு திமுக அரசு பல நேரங்களில் எதிர்வினையாற்றி வருகிறது.
சனாதனம் பற்றி பேச்சுக்கும், திராவிடம் குறித்த பேச்சுக்கும், திருக்குறள் பற்றிய பேச்சுக்கும் திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதிரடி சோதனைகள்
கடந்த மாதம் தமிழகம் முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கோவை, மதுரை, திண்டுக்கல், கடலூர், கன்னியாகுமரி, தாம்பரம் உள்பட தமிழகம் முழுவதும் 19 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு சம்பவங்கள் நடந்தது. தஞ்சை பகுதியில் அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. அதைதொடர்ந்து பெட் ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலத்தில் சிக்கிய ஆவணங்கள்
இதற்கிடையே சேலத்தில் தேசிய பாதுகாப்பு முகமை சோதனையில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சேலத்தை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி,24 சஞ்சய் பிரகாஷ் 24 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் தமிழகத்தில் பெரிய அளவில் தாக்குதல் தொடர்பான ஆவணங்கள், அரசியல் தலைவர்களை கொலை செய்யும் வகையில் ஆன்லைன் மூலம் துப்பாக்கி தயாரித்தது. தோட்டாக்கள் தயாரித்தது, வெடி பொருட்கள் தயாரித்ததற்கான ஆவணங்கள் சிக்கியது. மேலும், தாக்குதல் சம்பவத்தின் போது போலீசாரிடம் சிக்காமல் இருக்க சயனைட் குப்பியும் தயாரித்துள்ளனர். அதற்காக காட்டில் உள்ள குறிப்பிட்ட செடியின் சாறு, மற்றொரு செடியின் விதைகளை விஷமாக சேகரித்து சயனைட் தயாரித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

சதி திட்டம் முறியடிப்பு
கைது செய்யப்பட்ட இரண்டு வாலிபர்களும் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தின் மறைமுக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இரண்டு வாலிபர்களும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக ஆன்லைன் மூலம் வாக்கி டாக்கி வாங்கி அதை ரகசியமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
எனவே தமிழகத்தில் பெரிய அளவில் தாக்குதல் சம்பவங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ரிப்போர்ட்டை உள்துறை அமைச்சரிடம் அளிப்பார் என தெரிகிறது.

ஆர்எஸ்எஸ் பேரணி
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அக்டோபர் 2ஆம் தேதி அனுமதி மறுத்தது. நவம்பர் 6 ஆம் தேதி பேரணிக்கு அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி விசிக மனித சங்கிலி போராட்டம் நடத்தியது அதில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்தி திணிப்பு போராட்டம்
அமித்ஷா குழுவின் பரிந்துரைக்கு எதிராகவும் இந்தி திணிப்பை கண்டித்தும் அக்டோபர் 15 ஆம் தேதி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு நாட்கள் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக நிலவரங்கள் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடுத்துரைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications