இரவு முழுக்க மின்தடை பற்றி விசாரித்த முதல்வர்! அன்று நடந்தது என்ன? செந்தில் பாலாஜி சொன்ன சீக்ரெட்!
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று முதல்நாள் மின் தடை ஏற்பட்ட போது முதல்வர் ஸ்டாலின் இரவு முழுவதும் விசாரணை நடத்தியதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று முதல்நாள் பல மாவட்டங்களில் 2-3 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. சில மாவட்டங்களில் 10 மணிக்கு போன மின்சாரம் 12 மணிக்குத்தான் வந்தது.
பல்வேறு மாவட்டங்களில் இரவு 8 மணிக்கு போன மின்சாரம் இரவு 11 மணிக்குத்தான் வந்தது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று கொடுத்த விளக்கத்தில், மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதுதான் மின்தடைக்கு காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
கவன ஈர்ப்பு தீர்மானம்
இந்த மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அரசு மக்களுக்கு மின்சாரம் வழங்க தவறிவிட்டது. மின்சாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது; இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகின்றது. தடையில்லா மின்சாரம் கொடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது இந்த அரசு என்று எடப்பாடி பழனிசாமி இதில் கேள்வி எழுப்பினார்.
செந்தில் பாலாஜி
இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சட்டசபையில் அளித்த விளக்கத்தில், தமிழ்நாட்டின் ஒரு நாள் சராசரி மின் நுகர்வு என்பது 317 மில்லியன் யூனிட்டில் இருந்து 342 மில்லியன் யூனிட்டாக உயர்ந்தது. 20ம் தேதி இந்த தேவை 347 மில்லியன் யூனிட்டாகவும் நேற்று, 363 மில்லியன் யூனிட்டாகவும் மின் நுகர்வு உயர்ந்து உள்ளது. இந்த உயர்வை கருதி தேவைக்கு ஏற்ப உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி இருந்தார். இதற்கான ஆலோசனைகளை அவர் வழங்கி இருந்தார்.
கோடை
கோடை காலங்களை எதிர்கொள்ள கூடிய வகையில், தேவையான மின்சாரத்தை நாம் கையிருப்பில் வைத்திருக்க கூறினார். ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு தேவையான மின்சாரத்திற்கு அளவை கணக்கிட்டு, ஏறத்தாழ 3000 மெகாவாட் அளவிற்கு குறைந்த விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான மின்சாரம் பெறப்பட்டு வருகிறது.
மத்திய தொகுப்பு
குறிப்பாக மத்திய தொகுப்பில் இருந்து நாம் பெறப்பட்ட மின்சாரம் திடீரென நின்றது. ஒரே நாளில் 796 மெகாவாட் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திடீரென தடைபட்டது. இப்படி மின்சாரம் தடைபட்ட சில நிமிடங்களில் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மின்சாரத்தை உடனே மீட்டு, மக்களுக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜி பேச்சு
இரவு பொழுதாக இருந்தாலும்.. நடு இரவிலும் மின் விநியோகம் சரி செய்யப்பட்டதாக தொடர்ந்து முதல்வர் விசாரித்தார். இரவு முழுக்க முதல்வர் ஆலோசனை வழங்கினார். இரவோடு இரவாக தனியாரின் மின்சாரம் வாங்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஏனென்றால் மத்திய மின்சாரம் வரவில்லை. இதனால் இன்னொரு பக்கம் நம்முடைய சொந்த உற்பத்தியை உயர்த்த முயற்சிகள் எடுக்கப்பட்டது.
ஸ்டாலின்
அத்தனை பணிகளும் இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகரப்பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு உள்ளாக மின்சாரம் வழங்கப்பட்டது. மற்ற பகுதிகளிலும் அதன்பின் வரிசையாக மின்சாரம் வழங்கப்பட்டது. இந்த மின் தடை மத்திய தொகுப்பில் இருந்து ஏற்பட்ட மின் தொகுப்பு நிறுத்தத்தால் வந்தது. அதை நாம் இரவோடு இரவாக சமாளித்தோம்.
Recommended Video
தனிப்பட்ட மின் உற்பத்தி
தமிழ்நாட்டின் தனிப்பட்ட மின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை மறக்க வேண்டாம். அன்று செய்த பணிகள் மூலம் மின் உற்பத்தியும் தனியாக உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அன்று 41 இடங்களில் மின் தடை ஏற்பட்டது. அது உடனே நம்முடைய சொந்த உற்பத்தி மூலம் சரி செய்யப்பட்டது, என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.