தொகுதி மறுவரையறை மூலம் தென் மாநிலங்களை தண்டிக்க சதி நடக்கிறது.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அட்டாக்
சென்னை: தமிழ்நாடு இந்தியாவையே வழிநடத்தி வருகிறது என்றும், தென் மாநிலங்களை தண்டிக்க சதித்திட்டம் நடக்கிறது எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் தி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- லோக்சபா தொகுதி வரையறை செய்வதன் மூலம் சிறப்பாக செயல்பட்ட தென் மாநிலங்களை தண்டிப்பதற்கான சதித்திட்டம் தீட்டப்படுகிறது. 1970களில் மத்திய அரசு மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டத்தை ஊக்குவித்தது.

இதை தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுத்தின. இதனால், தென் மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்தது. மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தாத மாநிலங்களோடு ஒப்பிட்டால் அவர்களின் மக்கள் தொகை விகிதம் வேகமாக வளர்ச்சி அடைந்தது. தென் மாநிலங்களின் மக்கள் தொகை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது தற்போது அது எங்களுக்கு எதிராக திருப்பி பயன்படுத்தப்படுகிறது.
ஆளுநர் மூலமாக அதிகாரம்: துரதிர்ஷ்டவசமாக மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக கூட்டாட்சி தத்துவத்தை மதிப்பது இல்லை. அதிகாரத்தை தன்வசமே குவிக்க அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தனது அரசியல் எதிரிகளை வேட்டையாட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது. பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக அதிகாரத்தை செலுத்த பார்க்கிறது.
தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு இதற்கு சிறந்த உதாரணமாக உள்ளது. நீட் மற்றொரு பேரழிவாகும். தமிழ்நாட்டில் இந்த தேர்வு திணிக்க்கப்பட்டு இருக்கிறது. கடந்த நூற்றாண்டில் நீங்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் சமஸ்கிருதம் பயின்றாக வேண்டும். எம்.பி.பி.எஸ் படித்து மருத்துவர் ஆவதற்கும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்பதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? நீதிக்கட்சிதான் இந்த விதியை ஒழித்தது.
29 பைசா மட்டுமே: தற்போதைய பாஜக நீட் தேர்வை திணித்துள்ளது. நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் சுமார் 22 மாணவர்கள் உயிர் பறி போயிருக்கிறது. நாட்டின் பிற இடங்களிலும் மருத்துவர் கனவுடன் இருக்கும் பல மாணவர்களின் உயிரை நீட் பறித்து இருக்கிறது. மத்திய அரசுக்கு அதிக வரியை தென் இந்திய மாநிலங்கள் செலுத்துவதும் குறைந்த அளவே மத்திய அரசின் பங்கு கிடைப்பதும் புதிது கிடையாது. தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு 1 ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே திரும்ப கிடைக்கிறது.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று கூட இந்த அநீதி குறித்து சட்டப்பேரவையில் பேசினார். 2014 முதல் 5 லட்சம் கோடி வரியை தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது. ஆனால் வெறும் 2 லட்சம் கோடி மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்கள் எடுத்துக்காட்டாக உத்தர பிரதேசம் இந்த 9 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வரியாக செலுத்தியுள்ளது. ஆனால் அந்த மாநிலத்திற்கு 9 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு திரும்ப கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications