போலாம் ரைட்....விசிலடித்த கண்டக்டர் கிளம்பிய பேருந்துகள் - 27 மாவட்டங்களில் இயல்புநிலை
சென்னை: தமிழ்நாட்டில் 27மாவட்டங்களில் காலை 6 மணி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. பயணிகள் உற்சாகத்துடன் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முக கவசம் அணிந்திருக்கும் பயணிகள் மட்டுமே பேருந்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே மாதம் முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. படிப்படியாக கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த வாரம் முதல் பேருந்து சேவை இயக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா குறைந்துள்ள 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிவிப்பு வெளியிட்டார்.

பரவல் அதிகம்
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் வகை மாவட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் உள்ளன.

23 மாவட்டங்கள்
23 மாவட்டங்கள் 2வது வகையில் உள்ளன. அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் இந்த வகை பிரிவில் உள்ளன.

இயல்பு நிலை திரும்பியது
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் 3வது வகை பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்த 27 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்திருப்பதால் 90 சதவிகித தளர்வுகள் அமலில் உள்ளன. இந்த 27 மாவட்டங்களிலும் இயல்பு நிலை முழுமையாக திரும்பி உள்ளது.

காலை 6 மணி முதல்
27 மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கி உள்ளது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம்போல பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து முதல் கட்டமாக 23 மாவட்டங்களுக்கு 200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்துகள் கிளம்பின
அதிக கட்டுப்பாடுகள் உள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற முக்கிய நகரங்களுக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காலை முதலே வெளியூர் செல்லும் பயணிகள் உற்சாகத்துடன் கிளம்பியுள்ளனர். முக கவசம் அணிந்துள்ள பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications