தமிழகம் முழுவதும் பஸ் ஓடும்.. இபாஸ் முறை ரத்து.. மிகப்பெரிய தளர்வு அறிவித்த ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் வரும் 5ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து கடைகளையும் அனைத்து இடங்களிலும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் உள்பட எங்கு சென்றாலும் இனி இபாஸ் தேவையில்லை. டாஸ்மாக் கடைகளை இரவு 8 மணி வரை திறக்கவும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் தொடர் நடவடிக்கை காரணமாக தினசரி பாதிப்பு 4 ஆயிரம் என்கிற அளவிற்கு குறைந்துள்ளது. கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது இதையடுத்து தமிழக அரசு இந்த வாரம் மிகப்பெரிய அளவில் தளர்வுகளை அறிவித்துள்ளது.

ஸ்டாலின் அறிவிப்பு
ஒவ்வொரு 7 நாட்களுக்கு ஒரு முறை ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் தளர்வுகள், கட்டுப்பாடுகளை அறிவிப்பார். அந்த வகையில் ஊரடங்கு வரும் 5 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் பல்வேறு தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார். 5ம் தேதி முதல் என்னென்ன தளர்வுகள் என்பதை இப்போது பார்ப்போம்.

என்னென்ன தளர்வுகள்
5ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் இருந்தும் எந்த மாவட்டத்திற்கும் இ பாஸ் இல்லாமல் செல்ல முடியும். 50 சதவீத இருக்கைகளில் பயணிகளுடன் பேருந்துகள் இயக்கலாம்.

எங்கும் செல்லலாம்
தமிழகத்தில் இபாஸ் மற்றும் இ பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வகை ஒன்று , வகை இரண்டு, வகை மூன்று என்று கொரோனா பாதிப்பு வாரியாக பிரிக்கப்பட்டு நடைமுறையில் இருந்த இபாஸ் முறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி உள்பட தமிழகத்தின் கோடைவாசல்தளங்களுக்கு செல்ல திங்கள் முதல் இபாஸ் தேவையில்லை

கடைகள் திறப்பு
தமிழகத்தில் திங்கள் முதல் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து துணிக்கடை, நகைக்கடைகள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை கடைகளும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உணவங்களில் சாப்பிடலாம்
அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பொழுது போக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் வாடிக்கையாளர்கள்5 50 சதவீதம் அளவிற்கு தங்கி சாப்பிடவும், தங்கும் விடுதிகள், செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

மதுபான பார்கள்
மாநிலம் விட்டு மாநிலத்திற்கான அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள், மதுபான பார்கள், உயிரியல் பூங்காக்களுக்கு தடை தொடரும். திரையரங்குகள் செயல்பட அனுமதி இல்லை. பொதுமக்கள் கலந்து கொள்ளும் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு, விளையாட்டு கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications