தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அமைச்சர் துரைமுருகன் திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இதுவாகும். கொரோனா தொற்று காரணமாக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கலைவாணர் அரங்கத்தில்தான் நடைபெற்று வந்தது.
தற்போது கொரோனா ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதால் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலக வளாகத்துக்குள் உள்ள சட்டமன்றத்திற்குள் சட்டசபையை நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சட்டசபை கூட்டத்தொடர்
சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளான ஜனவரி 5-ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தை தொடர்ந்து பொது பட்ஜெட்டும், அடுத்ததாக மானிய கோரிக்கையும் இங்கேயே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காகிதமில்லா கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.

துரைமுருகன் சந்திப்பு
இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழக சட்டசபை முன்னவரும்., நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சந்தித்து பேசினார். 5-ம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் தொடங்க உள்ள நிலையில் அதில் கலந்து கொண்டு உரையாற்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார். அதற்காகத்தான் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நீட் விலக்கு மசோதா
மேலும். நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்தும் ஆளுநரிடம் துரைமுருகன் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணைக்கு ஒப்புதல் அளிக்கும்படியும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் துரைமுருகன் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

அண்ணாமலைக்கு பிறகு...
பாஜக ஆதரவாளரும், பிரபல யூடியூபருமான மாரிதாஸ் தமிழ்நாட்டை காஷ்மீருடன் தொடர்புபடுத்தி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டார். இதற்கு கடுமையாக பொங்கியெழுந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக போலீசாரை கடுமையாக தாக்கினார். இதன் பிறகு அண்ணாமலை பாஜக மூத்த தலைவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது தமிழக அரசு பேச்சு சுதந்திரத்தை நசுக்கிறது என்று அவர் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் துரைமுருகன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications