உதயநிதி ஸ்டாலினின் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை! முன்மாதிரி எம்.எல்.ஏ.! அமைச்சர்களின் அதீத பாசம்!
சென்னை: உதயநிதி ஸ்டாலினின் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை எனக் கூறியிருக்கிறார் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி.
மேலும், 234 தொகுதிகளுக்கும் முன்மாதிரி தொகுதியாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திகழ்வதாகவும் முன் மாதிரி எம்.எல்.ஏ.வாக உதயநிதி ஸ்டாலின் திகழ்கிறார் எனவும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியை காட்டிலும் முன் மாதிரி தொகுதியாக சேப்பாக்கம் திகழ்வதாக அமைச்சர் கூறியிருப்பது தான் இங்கு கவனிக்கத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின்
தமிழக அமைச்சரவை இம்மாத இறுதிக்குள் மாற்றியமைக்கப்படும் என ஆருடங்கள் கூறப்படும் நிலையில், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்ற குரல்கள் திமுகவில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன. அண்மையில் அவரது 45வது பிறந்தநாள் விழா நடைபெற்ற நிலையில் தொடர்ச்சியாக பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் கலந்துகொண்டு பேசும் அமைச்சர்கள் அனைவரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் எனப் பேசி தங்கள் அன்பையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அமைச்சர்கள் குரல்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டால் அவரிடம் உள்ள திறமை ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பயன் தரும் வகையில் இருக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார்.இதேபோல் உதயநிதிக்கு கட்சிக்காரர்கள் ஆதரவு மட்டுமின்றி மக்களின் அன்பும் ஆதரவும் உள்ளதாக அமைச்சர் முத்துசாமி பேசியிருந்தார். அமைச்சர் சிவசங்கரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என தொடர்ந்து பேசி வருகிறார்.

அமைச்சர் மூர்த்தி
அந்த வரிசையில் இடம் பிடித்துள்ள அமைச்சர் மூர்த்தி எல்லாவற்றுக்கும் மேலாக, உதயநிதி ஸ்டாலினின் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை எனப் பேசி கவனம் ஈர்த்திருக்கிறார். இதுமட்டுமல்ல 234 தொகுதிகளுக்கும் முன்மாதிரி தொகுதியாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திகழ்வதாகவும் முன் மாதிரி எம்.எல்.ஏ.வாக உதயநிதி ஸ்டாலின் திகழ்கிறார் எனவும் கூறியுள்ளார். இவர் சொல்வதை பார்த்தால் முதலமைச்சர் தொகுதியான கொளத்தூரை காட்டிலும் சேப்பாக்கம் சிறந்து விளங்குவதாக பொருள்படுகிறது.

என்ன துறை?
அமைச்சர்கள் வரிசையாக உதயநிதிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதை வைத்து பார்த்தால் அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் கட்டாயம் இடம் பிடித்துவிடுவார் போல் தெரிகிறது.இதனிடையே உதயநிதிக்கு உள்ளாட்சித் துறை தான் என ஆருடங்கள் கூறப்படுவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications