எஸ்எஸ்எல்சி ரிசல்ட் 2021: மார்க் இல்லாத 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் - தேர்ச்சி மட்டுமே
மதிப்பெண்கள் எதுவும் இல்லாமல் தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக கல்வித்துறை வரலாற்றில் இது முதன் முறையாகும்.
சென்னை: எஸ்எஸ்எல்சி ரிசல்ட் பார்க்கவும் மார்க் எத்தனை என்று பார்க்கவும் தவமிருந்த காலங்கள் மாறி இன்று தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. மதிப்பெண்கள் எதுவும் இல்லாமல் தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது. இது தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதன் முறையாகும். இது அனைத்து மாணவர்களும் படிப்பில் சமம் என்ற சமச்சீர் நிலையை உருவாக்கியுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வந்து சமச்சீர் கல்வியை அப்போதய திமுக அரசு கொண்டு வந்தது. நன்றாக படித்த மாணவர்கள் 495 மதிப்பெண்கள் எடுத்து முதல் மதிப்பெண் பெற்றனர். எஸ்எஸ்எல்சியில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களின் புகைப்படங்களைப் போட்டு விளம்பரம் செய்து பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
இது போல் விளம்பரம் செய்வதால் பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளையும் அதிக மதிப்பெண் எடுக்க வலியுறுத்தினர். இதனால் பல கல்வியாளர்கள் மதிப்பெண்கள் மாணவர்களுக்கு மன அழுத்தம் தருவதாக கூறியதோடு குழந்தைகளை மதிப்பெண்கள் பெறும் இயந்திரமாக உருவாக்கக் கூடாது என்று சொல்லி வந்தனர்.

மதிப்பெண்களும் விளம்பரங்களும்
பள்ளி மாணவர்களின் புகைப்படத்தையும், மதிப்பெண்களையும் போட்டு விளம்பரம் செய்யக் கூடாது என்று அரசு தடை விதிக்கவே, இந்த விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. அதே நேரத்தில் நீட் மதிப்பெண் விளம்பரங்கள் இன்னமும் நாளிதழ்களில் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

கொரோனாவால் மாறிய கல்வி
கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் கல்வி முறையே மாறி விட்டது. வகுப்பறைகளுக்கு சென்று நண்பர்களுடன் பேசி சிரித்துக்கொண்டே படித்த காலம் மாறி ஆன்லைன் வகுப்புகளில் காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு படிக்கும் காலம் வந்து விட்டது.

ஆல்பாஸ் அறிவிப்பு
2019 - 2020ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மதிப்பெண்களுடன் கிடைத்தது. காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் முழு ஆண்டிலும் கிடைத்தது. அதே நேரத்தில் 2020 - 2021ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் பள்ளிக்கு போகாமல் பாடங்களை படிக்காமல் தேர்வும் எழுதாமல் தற்போது தேர்ச்சி பெற்றுள்ளனர். வெறும் தேர்ச்சி என்று மட்டுமே போட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

மார்க் ஷீட் பதிவிறக்கம்
இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று காலை வெளியாகியுள்ளது.
www.dge.tn.gov.in, tnresults.nic.in ஆகிய இணைய தளங்களில் பிறந்த தேதி மற்றும் மாணவர்களின் பதிவு எண் ஆகியவற்றை பதிவிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 9ஆம் மதிப்பெண்களை வைத்து பிளஸ் 1 வகுப்புக்கு அட்மிசன் போட்டு விட்டனர். இன்றைய தினம் மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது.

பள்ளிகள் திறப்பு
செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் தமிழக பள்ளிகளில், 9, 10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடைபெற உள்ளன. சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டாவது வகுப்புகள் முழுவதுமாக நடைபெற்று தேர்வு எழுதி மதிப்பெண்களுடன் மதிப்பெண் பட்டியல் வாங்க வேண்டும் என்று மாணவர்கள் வேண்டிக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications