பள்ளிகள் திறக்காததால்.. ஆசிரியர்கள் சம்பளம் பாதியாக குறைப்பு? அன்பில் மகேஷ் பொய்யாமொழி சூசகம்
சென்னை: தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் பாதியாக குறைக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி கிட்டத்தட்ட இதை உறுதி செய்வது போல இருக்கிறது.
கொரோனா நோய் பரவல் காரணமாக அரசு ஊழியர்களுக்கான ஈட்டு விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணி ஆணை வழங்கிய முதல்வர்
அரசு ஊழியர்கள் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் உள்ளிட்ட முன்கள பணியாளர்களும் வருகிறார்கள். எனவே, இது போன்ற நடவடிக்கைகளுக்கு காவல்துறையில் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
போலீஸ் பணிச்சுமை
காவல்துறையினரும் முன் களப்பணியாளர்கள் என்ற வகையில் ஓய்வு இல்லாமல் உழைத்து வருகிறார்கள். தேர்தல் பணிகள், நோய் தடுப்பு பணிகள் உள்ளிட்ட தொடர் பணிச்சுமையால் போலீசார் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு போதிய விடுமுறை வழங்கப்படுவது கிடையாது. இப்படியான நிலையில் அரசு ஊழியர்கள் என்று சொல்லி முன்கள பணியாளர்களையும் பிற ஊழியர்களை போல ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது சரியாக இருக்காது என்று போலீசார் மத்தியில் அதிருப்தி குரல் எழுப்பியதாக தகவல்கள் வெளியாகின.
முன்கள பணியாளர்கள்
அதிலும் குறிப்பாக அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளிகள் திறக்கப்படாததன் காரணமாக தொடர்ந்து வீட்டில் இருக்கிறார்கள் . அவர்களையும் தொடர்ந்து பணியில் இருக்கும் காவல்துறையினரையும் ஒரே மாதிரியாக அணுகுவது சரியான நியாயமாக இருக்காது என்று வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைத்தளங்களில் மெசேஜ்கள் பரவின. முன்கள பணியாளர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும், ஊக்கத்தொகை வழங்க வேண்டும், இதற்காக பிற அரசு பணியாளர்களின் ஊதியத்தை குறைந்தாலும் பரவாயில்லை என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவின.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நேற்று, மணப்பாறை அரசு மருத்துவமனை ,அரியமங்கலம் குப்பை கிடங்கு , சத்திரம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் உள்ளிட்டவற்றை மேற்பார்வை செய்தார். இதன்பிறகு நிருபர்களிடம் பேட்டியளித்த அவரிடம் வேலையில்லாமல் ஓராண்டாக இருக்கும் ஆசிரியர்களின் ஊதியத்தை பாதியாக குறைத்து முன் களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று கருத்துக்கள் பரவிவருகிறதே, பள்ளிக்கல்வித்துறைக்கு இது தொடர்பாக ஏதாவது திட்டம் இருக்கிறதா என்று அப்போது நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
முதல்வருடன் ஆலோசனை
இதற்கு பதில் அளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது போன்ற கோரிக்கைகள் பள்ளிக்கல்வித்துறைக்கு வாட்ஸ்அப் மூலமாக தெரிவிக்கப்பட்டு வருகின்றன . இதுபற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று அவருடைய அறிவுரையின்படி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆசிரியர்களின் சம்பளம் பாதியாகக் குறைக்க வாய்ப்பு இருப்பதாக மறைமுகமாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார் என்கிறார்கள்.
சம்பளம் குறைப்பு
அதேநேரம் சம்பளம் பாதியாகக் குறைக்கப்படுமா அல்லது 70 விழுக்காடு வழங்கப்படுமா 80 விழுக்காடு வழங்கப்படுமா என்பதெல்லாம் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். ஆனால் எப்படியும் ஊதியக் குறைப்பு இருக்கக்கூடும், முன் களப் பணியாளர்களுக்கு அது திருப்பி விடப்படும் என்பதுதான் தமிழக அரசு வட்டார தகவலாக இருக்கிறது.