தமிழகத்தில் 7 ஆம் தேதி வரை அனல் காற்று...மாலை நேரத்தில் மழை - கடலில் சூறாவளி வீசும்
தமிழகத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி வரை வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்காலில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: வடமேற்கில் இருந்து தரைக்காற்று தமிழகம் நோக்கி வீசுவதால் ஏப்ரல் 7ஆம் தேதிவரை அனல்காற்றுடன் வெப்பநிலை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் வெயிலின் தாக்கத்தால் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. சென்னையில் 107 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. வேலூர், ஈரோட்டில் 110 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. இது மாநிலத்திலேயே அதிகபட்ச அளவாகும். மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல்7ம் தேதி வரை வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 4ல் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
ஏப்ரல் 6ம் தேதி அன்று கரூர், தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4ல் இருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
அந்தமான் அருகே காற்றழுத்தம்.. ஏற்றப்பட்டது 1ம் எண் புயல் கூண்டு.. தமிழகத்தில் ஜில் ஜில் மழை பெய்யும்
சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவள்ளுரிலும் வெயில் அதிகரிக்கும் என்று வெப்பநிலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகரில் 6 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் உயரும்.
வெப்பச்சலனத்தால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணிவரை வெயில் அதிகரிக்கும் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. வேட்பாளர்கள், வாக்காளர்கள் வாக்கு சேகரிக்க செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாற வாய்ப்புள்ளதால் வடக்கு அந்தமான் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். மன்னார் வளைகுடா பகுதியிலும் இன்று 60 கி.மீ.வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.