'சென்னைவாசிகளே.. அடுத்த 4 நாள் உங்களுக்கு ஒரே ஜாலிதான் போங்க'.. 'ஜில்ஜில்' செய்தி சொன்ன வெதர்மேன்!
சென்னை: சென்னையில் அடுத்த மூன்று, நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் திடீர் மழை
இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று சூறைக்காற்றுடன் திடீரென பலத்த மழை கொட்டி தீர்த்தது. வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், புரசைவாக்கம், அண்ணா நகர், கோயம்பேடு. மதுரவாயல், வானகரம், போரூர், வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது.

குளம்போல் தேங்கிய தண்ணீர்
கிண்டி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கே.கே.நகர், ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டியது. இந்த திடீர் மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த திடீர் மழையால் சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.

நான்கு நாட்களுக்கு மழை இருக்கு
பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மென் தெரிவித்துள்ளார். இன்று மதிய வேளையில் டெல்டாவின் திருவாரூர்-நாகை பெல்ட் பகுதிகளில் மழை பெய்தது.

வெதர்மென் கணிப்பு
மாலை வேளையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்கள் அனைத்தும் இடி மின்னலுடன் மழை கொட்டியுள்ளது. இன்று மட்டுமல்ல அடுத்த 3-4 நாட்களுக்கு மேற்கண்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்க்க போகுது என்று தமிழ்நாடு வெதர்மென் கூறியுள்ளார்.

அதிகபட்ச மழை எங்கே?
சென்னை வில்லிவாக்கத்தில் அதிகபட்சமாக 7 செ.மீ மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 4 செ.மீ மழையும் கொட்டியுள்ளது. சென்னையில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களிலும், தர்மபுரி, சேலம், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்டக்களிலும் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications