ரூ.5000 கடனை செலுத்தாத பாஜக பிரமுகர்.. தமிழிசை படத்தையே ஆபாசமாக சித்தரித்த லோன் ஆப்! ஆன்லைனில் லீக்
சென்னை: பாஜக பிரமுகர் லோன் ஆப்பில் பெற்ற ரூ.5,000 கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் அவரது செல்போனில் இருந்த தமிழிசை சவுந்திரராஜனின் படத்தை ஆபாசமாக சித்தரித்து கடன் செயலி மோசடி கும்பல் வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழ்நாட்டில் ஒருபக்கம் தற்கொலைகள் அதிகரிக்க மறுபக்கம் ஆன்லைன் கடன் செயலிகளின் மிரட்டல்கள் மற்றும் அத்துமீறல்களின் காரணமாகவும் பலர் தற்கொலைக்கு தள்ளப்படும் அவலம் தொடர்கிறது.
குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபர்களின் ஆதார், பான் எண், மின்னஞ்சல் விவரங்களை ஆன்லைன் கடன் செயலிகள் பெற்று வாடிக்கையாளர் மொபைல் உள்ள விவரங்களையும் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்கின்றன.
இந்த விவரங்களை திருடிய பிறகு முறையாக கடனை திருப்பி அடைக்காத வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, கடனை திருப்பி செலுத்தியவர்களையும் மிரட்டி பணம் வசூலிக்கப்படுவதாக அதிகமாக புகார்கள் காவல்துறையிடம் குவிந்து வருகின்றன.

ஆன்லைன் கடன் செயலி
குறிப்பாக இந்த செயலிகள் வாடிக்கையாளர்களின் செல்போனில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் மற்றும் தொடர்பு எண்களை திருடி, கடனை திருப்பி செலுத்தாவிட்டால் உறவினர்கள் நண்பர்களுக்கு இதை மெசேஜாக அனுப்புவதுடன், அதில் இருக்கும் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து பகிர்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் மன அழுத்தத்தில் பலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

ராயல் கேஷ் ஆப்
இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த டெல்லி கோபி என்ற பாஜக நிர்வாகி ராயல் கேஷ் ஆப் என்ற செயலி மூலமாக ரூ.5,000 கடன் பெற்று இருக்கிறார். இந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் கோபி பணத்தை திருப்பி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழிசை படம்
இதன் காரணமாக அவரது செல்போனை ஹேக் செய்து அதில் இருக்கும் கோபி மற்றும் வேறு சிலரின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து அவரது நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்துள்ளனர். குறிப்பாக கோபியின் செல்போனில் இருந்த தெலுங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனின் படத்தையும் ஆபாசமாக சித்தரித்து அந்த கும்பல் பகிர்ந்து இருக்கிறது.

போலீசில் புகார்
இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் டெல்லி கோபி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இரண்டு மாநிலங்களின் ஆளுநர் படத்தையே ஆபாசமாக சித்தரித்து லோன் ஆப் மோசடி கும்பல் வெளியிட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications