நெரிசல்.. “லாக்” ஆன தமிழிசை! கத்தி கூச்சலிட்ட மக்கள்.. ஓடி வந்த காவலர்கள் - சென்னை ஏர்போர்டில் பரபர
சென்னை: விமான நிலையத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் ஆறடுக்கு கார் நிறுத்தம் காரணமாக ஏற்பட்ட வாகன நெரிசலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சிக்கிக்கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தை நவீனமாக மேம்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விமான நிலைய நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு முனையங்களுக்கு வரும் வாகனங்களுக்கு புதிய நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது.
6 அடுக்குகளை கொண்ட இந்த வாகன நிறுத்தும் இடம் ரூ.230 கோடி மதிப்பில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டு இருக்கிறது. கடந்த ஆகஸ்டு மாதமே இந்த வாகன நிறுத்தம் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆறடுக்கு கார் நிறுத்தம்
இந்த நிலையில் ஆறடுக்கு கார் நிறுத்தம் இன்று செயல்பாட்டிற்கு வந்து இருக்கிறது. இந்த வாகன நிறுத்தத்தை பயன்படுத்துவதற்கான டோக்கனை பெறுவதற்காக வாகன ஓட்டிகள் விமான நிலையத்தில் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். நீண்ட நேரமாகியும் டோக்கன் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழிசை சவுந்திரராஜன்
இந்த நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள்
கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அப்போது தெலுங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும் சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோது அவரும் அந்த கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டார்.

மாற்று பாதை
கூட்ட நெரிசலில் தமிழிசை சவுந்திரராஜன் சிக்கிக் கொண்டதை அறிந்த பாதுகாப்பு காவலர்கள், மாற்று பாதையில் அவரது காரை விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்கள். இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருகை தந்தார்.

தூத்துக்குடி பயணம்
தென்காசியில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த அவர், காவல்துறையினர் வழங்கிய மரியாதையை ஏற்றுக் கொண்டார். தன்னை வரவேற்க வந்திருந்த பொதுமக்களிடம் சென்று தமிழிசை சவுந்திரராஜன் சிறிது நேரம் கலந்துரையாடல் நடத்தினார்.

முதலமைச்சர் மாநாடு
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "டிசம்பர் 9 ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாட உள்ளார். அதற்கு அழைப்பு வந்து இருக்கிறது. ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் சட்ட மசோதா நிறைவேற்ற முடியாததற்கு தமிழ்நாடு ஆளுநர் சில காரணங்கள் கூறுகிறார்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியாதற்கு ஆளுநர் சில காரணங்கள் தெரிவித்துள்ளார். ஆளுநர்களுக்கு வரக்கூடிய மசோதாக்களை உடனே கையெழுத்திட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதில் சில சந்தேகங்கள் இருந்தால் அது தொடர்பாக ஆலோசனைகளை கேட்டுக்கொள்ள நேரம் எடுப்பது தவறில்லை.

ஆளுநர் விவகாரம்
ஒவ்வொரு கருத்து வேற்றுமைக்கும் ஆளுநர்களை திரும்ப பெற வேண்டும் என்று சொல்வது சரியான நடவடிக்கையாக இருக்காது என்பது எனது தாழ்மையான கருத்து. தமிழக ஆளுநருக்கு 'நீ என்ன அவருக்கு வக்காலத்து வாங்குவது' என்று சோசியல் மீடியாவில் ஆரம்பித்து விடுவார்கள். அதுபற்றி எனக்கு கவலை இல்லை." என்றார்.












Click it and Unblock the Notifications