மக்களுக்கு டோக்கன் கொடுத்தால் கடும் நடவடிக்கை.. ஸ்பெஷல் டீம் விசாரணை.. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
சென்னை: அரசியல் கட்சிகள் மக்களுக்கு டோக்கன் கொடுப்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம், கட்சியினர் டோக்கன் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு தீவிரமாக நடந்து வருகிறது.தேர்தலை முன்னிட்டு நேற்று சேலம், சென்னை, கொங்கு மாவட்டங்களில் அதிமுகவினர் டோக்கன் கொடுத்ததாக திமுக புகார் வைத்தது.
மக்களுக்கு டோக்கன் கொடுத்து, அவர்களுக்கு பணம் கொடுப்பதாக அதிமுக வாக்களித்தாக திமுக சார்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. திமுகவினரின் இந்த புகாரை அதிமுக தரப்பினர் மறுத்து இருந்தனர்.
டோக்கன்
டோக்கனை கொடுத்துவிட்டு.. மூக்குத்தி தருகிறோம், பட்டுப்புடவை தருகிறோம், கடையில் இந்த டோக்கனை காட்டி மளிகை பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று அதிமுக வாக்களித்ததாக திமுக தேர்தல் ஆணையத்திடம் புகார் வைத்தது. இந்த நிலையில் டோக்கன் கொடுப்பது குறித்து வாக்காளர்களுக்கு கட்சியினருக்கும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டோக்கன் புகார்
தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், டோக்கன் வாங்கிக்கொண்டு மக்கள் வாக்களிக்க கூடாது. டோக்கனை மக்கள் நம்ப கூடாது. டோக்கன் வாங்கிக்கொண்டு பணம் கொடுப்பார்கள் என்று நம்பி வாக்களிக்க கூடாது.
திமுக
மக்களுக்கு டோக்கன் கொடுப்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம். இதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்து இருக்கிறோம். இதற்காக புலனாய்வு குழுவை அமைத்து இருக்கிறோம். எந்தெந்த தொகுதிகளில் டோக்கன் கொடுக்கப்பட்டது என்று புலனாய்வு குழு மூலம் விசாரிக்கிறோம்.
விசாரணை
கட்சியினர் டோக்கன் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணித்து வருகிறோம்.டோக்கன் கொடுத்து, அந்த டோக்கன் மீது பின்பு பணம் கொடுக்க கூடாது. வாக்குக்கு பணம் கொடுப்பதை ஏற்க முடியாது. அது எந்த வகையில் நடந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
நடவடிக்கை
டோக்கன் கொடுக்கும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும், என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.