சசிகலா புஷ்பா முதல் கராத்தே வரை... கட்சி தாவியவர்களுக்கு பாஜகவில் பதவி - அப்போ பழைய நிர்வாகிகள்?
சென்னை: தமிழ்நாடு பாஜகவின் மாநில நிர்வாகிகள் பட்டியலில் கட்சி தாவிய பலருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே இந்த புதிய நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது.
உச்சத்தில் மாணவர் போராட்டம்.. அவசர நிலையை அறிவித்த ராஜபக்ச.. குழம்பி நிற்கும் இலங்கை மக்கள்
புதிய நிர்வாகிகள் பட்டியல்
இந்த நிலையில் இலங்கையிலிருந்து தமிழ்நாடு திரும்பிய அண்ணாமலை, வந்த கையோடு தமிழ்நாடு பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார். இதில், பாஜக சட்டமன்றக் குழு தலைவராக நயினார் நாகேந்திரனும், மாநில துணைத் தலைவர்களாக எம்.சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம், முன்னாள் எம்.பி, சசிகலா புஷ்பா, கே.எஸ்.நரேந்திரன், டால்பின் ஸ்ரீதர், கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத், கனகசபாபதி, பால் கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நயினார் நாகேந்திரன்
இதில் பாஜகவில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்துள்ள நிர்வாகிகளுக்கு இணையாக வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பாஜக சட்டமன்றக் குழு தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன், அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய நயினார் நாகேந்திரன் 2001 - 2006 வரை ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் மின்சாரத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தவர்.
வி.பி.துரைசாமி
அதிமுகவில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். சட்டமன்ற உறுப்பினராகவும், துணை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ள இவர், திமுகவில் உயரிய பொறுப்புகளில் ஒன்றான துணை பொதுச் செயலாளராக இருந்தார். இந்த நிலையில், அந்த பொறுப்பிலிருந்து திடீரென நீக்கப்பட்ட துரைசாமி, பாஜகவில் இணைந்து தற்போது மாநில துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
கே.பி.ராமலிங்கம்
தொடக்கத்தில் அதிமுகவிலும் பின்னர் திமுகவிலும் இருந்த கே.பி.ராமலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற பிரதமரும் முதல்வரும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டினார். இதன் பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் பாஜகவில் இணைந்த அவரும் தற்போது துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சசிகலா புஷ்பா
அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் சசிகலா புஷ்பா. ஜெயலலிதா தன்னை அடித்ததாக மாநிலங்களவையிலேயே பேசி தேசியளவில் சர்ச்சையை ஏற்படுத்திய அவர் 2016 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த அவர் பின்னர் பாஜகவில் ஐக்கியமானார். அவருக்கும் துணைத் தலைவர் பொறுப்பை பாஜக வழங்கியுள்ளது.
கராத்தே தியாகராஜன்
காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த கராத்தே தியாகராஜன் சென்னை மாநகராட்சியின் மேயராக பதவி வகித்தவர். காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்பூசல் காரணமாக பெரிதாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்த அவர் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க தீவிர ஆதரவு தெரிவித்து வந்தார். ஆனால், அறிவித்தபடி ரஜினி கட்சி தொடங்காததால் பாஜகவில் இணைந்த அவருக்கு மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது .
மற்ற நிர்வாகிகள்
அதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ. சிவப்பிரகாசம் பழங்குடியினர் அணி தலைவராகவும், முன்னாள் எம்.பிக்கள் சி.நரசிம்மன், கார்வேந்தன் ஆகியோர் மாநில செய்தித் தொடர்பாளர்களாகவும் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சோழன் பழனிசாமி உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவராகவும், கூட்டுறவு பிரிவு தலைவராக கே.மாணிக்கம் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.