"பூணூல் அறுப்பு" போராட்ட அறிவிப்பு.. குறி வைத்து தாக்குவதா? கொந்தளித்த தமிழ்நாடு பிராமணர் சங்கம்
பூணூல் அறுப்பு போராட்டத்துக்கு பிராமண சமாஜம் கண்டனம் தெரிவித்துள்ளது
சென்னை: இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹீம் அறிவித்துள்ள பூணூல் அறுப்பு போராட்டத்தை, தமிழ்நாடு பிராமண சமாஜம் கண்டித்துள்ளது.. இரு வேறு பிரிவுகளுக்கு இடையே விரோத உணர்ச்சிகளை தூண்டும் விதத்திலும் அறிக்கைகள் வெளியிடுவோர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிராமண சமாஜம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள், ஹிஜாப் உடையை அணிவதற்கு கர்நாடக கல்வித்துறை திடீரென தடை விதித்தது.
அதையடுத்து, உடுப்பியிலுள்ள மகாத்மா காந்தி நினைவு கல்லூரியில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய மாணவிகளைக் கல்லூரிக்குள் விட மறுத்து வெளியிலேயே நிறுத்தியது கல்லூரி நிர்வாகம்.
பிராமணர் கூட்டு இல்லாமல்.. திமுகவுக்கு அரசியலே இல்லை.. தள்ளாத வயதிலும்..நிர்வாகிக்கு கஸ்தூரி பதிலடி
கிறிஸ்தவர்கள்
அரசியல் சாசனம் கொடுத்த உரிமைப்படி எங்களை அனுமதிக்க வேண்டுமென்று 6 மாணவிகள் எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து போராடினார்கள்.. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியர், சீக்கியர்கள் டர்பன் அணியவும், கிறிஸ்தவர்கள் ஜெபமாலை அணியவும், இந்துக்கள் பூணூல் அணியவும், இஸ்லாமியர்கள் ஹிஜாப் அணியவும் அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. எங்களை மட்டும் தடுப்பது ஏன்? என்று காட்டமாக கேள்வி கேட்டார்கள்.
தேசிய மனித உரிமை ஆணையம்
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தின்மீது கர்நாடக ஹைகோர்ட்டிலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் மாணவிகள் முறையிட்டனர்... இது தொடர்பான வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது.. ஹிஜாப் அணிவதற்கு உரிமை உண்டு என்று உத்தரவிட கோரி கர்நாடக ஹைகோர்ட்டில் மாணவிகள் தொடர்ந்த வழக்கு விசாரணையில், மாணவிகள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் தேவதத் காமத், கர்நாடக அரசின் இந்துத்துவா நிலைப்பாட்டைக் கடுமையாக சாடியிருந்தார்.
ஹிஜாப் அணிய கூடாது
இந்த ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திவிட்டது.. ஹிஜாப் அணிந்ததற்கு சிலர் எதிர்வினையாற்றியும் வருகின்றனர்.. அந்த வகையில், அவர்களுக்கு பதிலடி தரும விதமாக பூணூல் அறுப்பு போராட்டம் இன்று நடத்தப்படும் என்று இந்திய தேசிய லீக் கட்சி உள்ளிட்ட சில அமைப்பினர் அறிவித்துள்ளன.. ஹிஜாப் அணியகூடாது என்று வலியுறுத்துபவர்களை எதிர்க்கவும், இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் வலி என்ன என்பதை பிறருக்கு உணர்த்தவும்தான் இந்த பூணூல் அறுப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிராமண சமாஜம்
இந்நிலையில், இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹீம் அறிவித்துள்ள பூணூல் அறுப்பு போராட்டத்தை, தமிழ்நாடு பிராமண சமாஜம் கண்டித்துள்ளது... இது தொடர்பாக மாநில தலைவர் நா. ஹரிஹரமுத்து ஐயர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது: "இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹீம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் "காஞ்சி சங்கர மடத்தில் இருந்து கோட்சேவின் வாரிசுகள் அணியும் பூணூல் அறுப்பு போராட்டம் தொடர்வோம்" என்று தெரிவித்துள்ளதை வன்மையான கண்டிக்கிறோம்.
ஹைகோரட்
தற்போது பள்ளிகளில் எழுந்துள்ள ஹிஜாப் அணிதல் விவகாரம் கர்நாடக மாநிலத்தில் எழுந்ததாகும் தமிழ்நாட்டில் இத்தகைய சூழல் இல்லை. அவ்விவகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இவ்விவகாரம் பள்ளி, மாணவ மாணவிகள் மற்றும் மாநில அரசு தொடர்புடையதே இன்றி எந்த ஒரு சமூகத்திற்கும் தொடர்புடையது அல்ல. இவ்விவகாரத்திற்கு எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத பிராமணர்களையும் இந்து சமுதாயத்தை சேர்ந்த பூணூல் அணியும் மற்றவர்களையும் குறிவைத்து தாக்குவோம் என்று அரைகூவலாக சொல்லுவதை கண்டிகிறோம்.
கண்டிக்கிறோம்
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இரு வேறு பிரிவுகளுக்கு இடையே விரோத உணர்ச்சிகளை தூண்டும் விதத்திலும் அறிக்கைகள் வெளியிடுவோர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறோம். மேலும் போற்றுதற்குரிய காஞ்சி சங்கராசாரியாருக்கும் சங்கர மடத்திற்கும் பூணூல் அணிவோர்களுக்கும் அவர்தம் நிறுவனங்களுக்கும் போதிய பாதிகாப்பு அளிக்குமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.