கடைசி நேரத்தில் ஜகா வாங்கும் அமைச்சர்கள்.. ஒற்றை ஆளாக பிரசாரம் செய்யும் பழனிசாமி.. காரணம் என்ன?
சென்னை: அதிமுக அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்வதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனி ஆளாக தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் பல முறைகளில் மக்களைக் கவர முயல்கின்றனர். ஆனாலும்கூட கட்சி தலைவர்களின் பிரசாரம் தமிழ்நாட்டில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கட்சி மற்றும் தலைவர்களுக்கே வாக்குகள் விழும்.
ஜெயலலிதா வாக்கு வங்கி
அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதா இருந்த வரை, இரண்டாம்கட்ட தலைவர்கள் பிரசாரத்தைப் பற்றி கவலைப்பட்டதில்லை. சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை ஜெயலலிதாவே மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொள்வார். எப்படி எம்ஜிஆருக்கு என்று தனியாக ஒரு பெரும் வாக்கு வங்கி இருந்ததோ, அதேபோல ஜெயலலிதாவுக்கு என வாக்கு வங்கி இருந்தது.
நாடாளுமன்றத் தேர்தல்
ஆனால், ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நிலைமை மாற தொடங்கிவிட்டது. தலைமையில் நிலவிய பிரச்சினை, திமுகவின் தீவிர பிரசாரம் ஆகியவற்றால் அதிமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இது கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பளீச் எனத் தெரிந்தது. துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்ட தேனி தொகுதி தவிர மற்ற 38 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியடைந்தது,
கூட்டணி கணக்கு
இருந்தாலும், அது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் பாஜக எதிர்ப்பு மனநிலை காரணமாக திமுக வென்றுவிட்டதாகவும் சட்டசபை தேர்தலில் அதிமுக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெல்லும் என்றும் அதிமுக தரப்பில் கூறப்பட்டது. மேலும், இந்தத் தேர்தலிலும் பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. தேமுதிக அதிக இடங்களைக் கேட்டதால் தந்திரமாக அக்கட்சியைக் கழற்றிவிட்டது அதிமுக!
திமுக தீவிர பிரசாரம்
எதிர் முகாமில் திமுகவும் காங்கிரஸ் இடதுசாரிகள், மதிமுக, விசிக என மிகவும் வலுவான ஒரு கூட்டணியை அமைத்துள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே திமுக தனது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர். ராசா, தயாநிதி மாறன், இளைஞரணி செயலாளர் உதயநிதி என தலைவர்கள் பட்டாளமே திமுகவுக்காகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.
தொகுதிகளைத் தாண்டாத அமைச்சர்கள்
அதிமுக தரப்பில் முதலில் ஒவ்வொரு அமைச்சருக்கும் 10 முதல் 20 தொகுதிகள் பிரிக்கப்பட்டது என்றும் அந்தத் தொகுதிகளில் அந்த அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தைச் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அமைச்சர்கள் தற்போது வரை தங்கள் தொகுதிகளைத் தாண்டவில்லை. துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் கூட இத்தனை காலம் தேனியிலேயே பிரசாரம் செய்தார். இன்றுதான் அவர் ஈரோட்டில் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
தனி ஆளாகப் பிரசாரம்
இதனால் அதிமுக வேட்பாளர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டிய மொத்த பொறுப்பும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வந்துள்ளது. அவர் இம்மாத தொடக்கத்தில் சேலம் வாழப்பாடியில் தனது பிரசாரத்தை தொடங்கி எடப்பாடி பழனிசாமி தனி ஆளாக அதிமுகவிற்காகச் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
சொந்த தொகுதியே முக்கியம்
இருப்பினும் தேர்தலுக்குக் குறைவான நாட்களே உள்ளதாலும் திமுக இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு இணையாக அதிமுக அமைச்சர்களும் பல தொகுதிகளில் பிரசாரம் செய்ய வேண்டும் என்பது எடப்பாடியாரின் விருப்பம். ஆனால், சொந்த தொகுதிக்கே முன்னுரிமை என்பதில் அதிமுக அமைச்சர்களும் உறுதியாக உள்ளனர்.
பாஜக தலைவர்கள்
இதனால் வேறுவழியின்றி ஒற்றை ஆளாக அதிமுகவின் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இருப்பினும் பாஜகவின் தேசிய தலைவர்கள் பிரசாரத்திற்கு வந்தால் அது சற்று கைகொடுக்கும் என நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக வரும் மார்ச் 30ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவரது பிரசாரம் அதிமுக பாஜக கூட்டணிக்கு உத்வேகத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.