2 மாதங்களுக்கு பின் 10,000 கீழ் கொரோனா பாதிப்பு.. இந்த 8 மாவட்டங்களுக்கு குட் நியூஸ்.. விரிவான தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் சுமார் இரண்டு மாதத்திற்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்களும் ஒரு லட்சமாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி மாநிலத்தில் 9344 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு சுமார் 60 நாட்களுக்குப் பிறகு தற்போது தான் வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்திற்குக் கீழ் பதிவாகியுள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் 27ஆவது நாளாக இன்றும் கொரோனா குறைந்துள்ள நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழாகச் சென்றுள்ளது. இன்று வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய மூன்று பேர் உட்பட 9,118 பேருக்குத் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 319 பேர் 12 வயதுக்குட்பட்ட சிறார்களாகும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,97,864ஆக அதிகரித்துள்ளது. இன்று மாநிலத்தில் மொத்தம் 1,75,010 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்புகள்
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் சிகிச்சை பலனின்றி 210 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 101 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 109 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். மேலும், இன்று உயிரிழந்தவர்களில் 44 பேர் இணை நோய் இல்லாதவர்கள், 44 பேர் 50 வயதுக்குட்பட்டவர்கள். இதுவரை மாநிலத்தில் 30548 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல ஆக்டிவ் கேஸ்களும் மாநிலத்தில் தொடர்ந்து குறைகிறது. நேற்று மாநிலம் முழுவதும் 1.14 லட்சம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது ஒரு லட்சமாகக் குறைந்துள்ளது. இதுதவிர இன்று ஒரே நாளில் மட்டும் சிகிச்சை பெற்றுவந்த 22,720 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது வரை 22,66,793 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மாவட்ட ரீதியாக பாதிப்பு
மாவட்ட ரீதியாகப் பாதிப்பு என்று பார்க்கும்போது, கோவை தான் முதலிடத்தில் உள்ளது. கோவையில் இன்று 1227 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல ஈரோட்டிலும் 1041 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் இன்று 559 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அரியலூர், திண்டுக்கல் பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100க்கும் கீழாகக் குறைந்துள்ளது.