அடுத்தடுத்து குறி.. பறக்கும் "கேஸ்கள்".. ஆட்சிக்கு வந்ததும் சிங்கப்பாதையில் திமுக.. என்ன நடக்கிறது?
சென்னை: திமுகவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பொய்யான புகார்கள், மிரட்டல்களை வைக்கும் நபர்களுக்கு எதிராக அடுத்தடுத்து நடவடிக்கை பாய்ந்து வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் வென்றுள்ள திமுக கூட்டணி அரசு நாளை ஆட்சி அமைக்க உள்ளது. 10 ஆண்டு போராட்டத்திற்கு பின் திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது.திமுக தலைவர் ஸ்டாலின் நாளை காலை தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் பல விஷயங்களை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றும் திட்டத்தில் உள்ளது. இதற்காக அக்கட்சி பல திட்டங்களை வகுத்துள்ளது.
முத்துச்சாமி, சாமிநாதனுக்கு "வெயிட்"டான துறை?.. 2026-இல் கொங்கு மண்டலத்தை அள்ள ஸ்டாலின் ஸ்கெட்ச்!
திமுக
இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு எதிராக வைக்கப்படும் அவதூறுகளை களையும் பணியில் திமுக களமிறங்கி உள்ளது. கடந்த 10 வருடங்களாக திமுகவிற்கு எதிராக இணையத்தில் உண்மையாகவும், பொய்யாகவும் நிறைய புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. திமுக செய்யவே செய்யாத விஷயங்களை கூட, செய்ததாக கூறி அவதூறுகள் பல பரப்பப்பட்டு வருகின்றன.
டாப் லீடர்
அதிலும் திமுகவின் டாப் லீடர்களை குறி வைத்து பொய்யான முறைகேடு புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் திமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டல்களும் வைக்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் 10 வருடமாக இதை எல்லாம் தட்டி கேட்க முடியாமல் இருந்த திமுக தற்போது அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி திமுகவிற்கு எதிராக பொய்யான புகார் வைக்கும் நபர்கள் மீது ஒரு பக்கம் போலீசில் வழக்கு பதியப்படுகிறது. உதாரணமாக சமீபத்தில் திமுகவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய எழுப்பிய எழுத்தாளருக்கு எதிராக தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதேபோல் திமுக எம்பி செந்தில்குமார் சொத்து குவிப்பு முறைகேட்டில் ஈடுபட்டதாக வதந்தி பரப்பிய இந்து மக்கள் கட்சி மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
செந்தில்குமார்
செந்தில்குமார் எம்பி மூலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கை வாபஸ் வாங்க மாட்டேன், கோர்ட்டுக்கு கண்டிப்பாக போவேன் என்று செந்தில்குமார் இந்த விவகாரத்தில் உறுதியாக இருக்கிறார். அதோடு திமுக கூட்டணியில் உள்ள விசிக எம்எல்ஏ ஆளுர் ஷானவாசுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த தஞ்சாவூர் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார்.
பாஜக நிர்வாகி
அந்த பாஜக நிர்வாகிக்கு எதிராக கொலை மிரட்டல் வழக்கும் பதியப்பட்டுள்ளது. இது அனைத்தும் தேர்தல் முடிவுகள் வந்து வெறும் 3 நாட்களில் நடத்த அதிரடிகள். அடுத்தடுத்து பலர் வரிசையாக சிக்கி வருகிறார்கள்.
சட்ட ரீதியான நடவடிக்கை
திமுகவிற்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளாக வைக்கப்பட்ட அவதூறுகள் அனைத்திற்கும் எதிராக அக்கட்சி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வருகிறது. இதுவரை பரப்பப்பட்ட பொய்யான அவதூறுகள், வீடியோக்கள், செய்திகளுக்கு எதிராக ஒவ்வொன்றாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
திமுக வட்டாரம்
இதில் சில அரசியல் விமர்சகர்கள் சிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்ததாக கூறி இவர்கள் மீது முறையாக சட்டத்தை பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கான சாம்பிள்தான் மேலே எடுக்கப்பட்ட மூன்று நடவடிக்கை என்றும் கூறுகிறார்கள்.