அந்த நம்பிக்கை இருந்தது.. திடீரென அமைச்சர் பிடிஆர் என்ன இப்படி சொல்கிறார்? எதை பற்றி பேசுகிறார்?
சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்து இருக்கும் ட்விட் ஒன்று திடீரென இணையத்தில் விவாதம் ஆகியுள்ளது.
தமிழ்நாடு நிதி அமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் ஐடி பிரிவு செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில்தான் சமீபத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பதவியை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியானது.
தனது கட்சி பதவியை பிடிஆர் முன்பே ராஜினாமா செய்துவிட்டார்.. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
மேட்டரே இதுதானாம்.. திமுகவின் அடுத்தடுத்த அஸ்திரங்கள்.. பதவியை ராஜினாமா செய்கிறாரா பிடிஆர்.. ஏன்?
பிடிஆர் ராஜினாமா
ஆனால் திமுக தரப்பில் இருந்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிப்புகள் எதுவும் வரவில்லை. இந்த நிலையில் திமுக தரப்பில் இருந்து கசிந்து வரும் தகவல்களின் படி மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பதவியை பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே பதவி ஏற்றுவிட்டார், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
டிஆர்பி ராஜா
இது தொடர்பான செய்திகள் எதையும் திமுகவினர் இது வரை மறுக்கவில்லை. அதே சமயம் உறுதி செய்யவும் இல்லை. திமுகவில் பிடிஆரின் கட்சி பொறுப்பு பறிக்கப்படுவதற்கு உறுதியான காரணம் தெரியவில்லை. ஒருவேளை நிதி அமைச்சரின் பணி சுமையை குறைக்க வேண்டும்.. ஐடி விங்கில் இளம் ரத்தத்தை பாய்ச்ச வேண்டும் என்று இந்த மாற்றம் நடக்கிறதா அல்லது திமுக தலைமை ஏதேனும் அதிருப்தியில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இப்படிப்பட்ட நிலையில்தான் திடீரென அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்து இருக்கும் ட்விட் ஒன்று திடீரென இணையத்தில் விவாதம் ஆகியுள்ளது. அதில், இந்திய ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் வலிமையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன், (பள்ளிக்கூடத்தில் அப்படித்தான் படித்து இருக்கிறேன்) சட்ட விதிகள் கடைபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு முன்பு இருந்தது.. என்று பிடிஆர் குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்திய ஜனநாயகத்தில் சட்ட விதிகள் முறையாக கடைபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு முன்பு இருந்தது என்று பிடிஆர் குறிப்பிட்டுள்ளார்.
விவாதம்
இந்த திடீர் ட்விட் நெட்டிசன்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏன் பிடிஆர் இப்படி போஸ்ட் செய்துள்ளார். கட்சி பதவி குறித்து ஏதாவது மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறாரா? கட்சியில் நீதி கடைபிடிக்கப்படவில்லை என்று கூறுகிறாரா? தனது பதவி பறிக்கப்பட்டது குறித்து ஏதாவது மறைமுகமாக தெரிவித்து உள்ளாரா? என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அவர் தனது போஸ்டை முழுவதாக முடிக்காமல் புள்ளிகள் வைத்து நிறுத்தி உள்ளதால் இந்த விவாதம் எழுந்துள்ளது.
உண்மை என்ன?
ஆனால் பிடிஆருக்கு நெருக்கமான சிலரோ, இது கட்சி மேட்டர் இல்லை.. நீதித்துறை பற்றித்தான் அமைச்சர் பேசி இருக்கிறார் என்று கூறுகிறார்கள். ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் நீதித்துறை. இந்தியாவில் கடந்த 2014ல் இருந்து வெறுப்பு பேச்சுக்கள் 1130 சதவிகிதம் அதிகரித்துள்ளது. முக்கியமாக விஐபிகள் வெறுப்பு பேச்சுக்களை வெளியிடுவது 160 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் இதில் நீதித்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதை பற்றி முன்பே பிடிஆர் பேசி இருந்தார்.. இப்போதும் இதைத்தான் பிடிஆர் அப்படி குறிப்பிட்டு இருக்கிறார்.. இதில் அரசியல் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.