சென்னையில் சில கட்டுப்பாடுகள் தளர்வு.. திங்கள் முதல் எந்தெந்த கடைகள், தொழில்கள் இயங்கலாம்?
சென்னை: சென்னையில் வரும் 4-ஆம் தேதி முதல் பிளம்பர், ஹார்டுவேர் கடைகள் உள்ளிட்ட கடைகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் நோய் தொற்று பரவல் அதிகமாக இல்லாமலும், சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாக இருக்கிறது. நோய் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சகம், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோரின் அறிவுரையின் பேரில் வரும் மே 4 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கீழ்க் காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.
எதற்கு அனுமதி
பெரு நகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர)
கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில் அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும்.
அனைத்து அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள், சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.
ஏற்றுமதி
சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக்குப் பின் சூழலுக்கேற்ப 25 சதவீத பணியாளர்களுடன் (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.
பணியாளர்கள்
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்: 10 சதவீதம் பணியாளர்களை கொண்டு (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.
கடைகள் திறப்பு
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள் (e- commerce) ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.
எத்தனை மணி வரை
அனைத்துத் தனிக் கடைகள் அதாவது முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் தவிர, ஹார்டுவேர், சிமென்ட் ,கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
யாருக்கு அனுமதி
பிளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள் (Home care providers) வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையர் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.