இரு 500 தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும்.. பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முக்கிய அறிவுரைகள்!
சென்னை: பொங்கல் தொகுப்பு விநியோகம் தொடர்பாக முக்கிய அறிவுரைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் தொடங்கி வைக்கிறார்.
பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தைத் திருநாளையொட்டி ஆண்டுதோறும் மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும். அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதல் பொங்கல் விழாவில் 14 மளிகை பொருட்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கியிருந்தார்.
ஆனாால் அவை சில இடங்களில் தரமற்றதாக இருந்தன. இதனால் எதிர்க்கட்சிகள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்தன. இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழக அரசு மீது களங்கம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என அரசு முடிவு செய்தது.

ஆலோசனை கூட்டம்
அதன்படி தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் மளிகை பொருட்களுக்கு பதிலாக ரூ 1000 வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ 1000, பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனுடன் கரும்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க முழு கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

டோக்கன்
இந்த திட்டத்திற்கான டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக வழங்கி வந்தனர். ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் பொருட்களை பெற்றுக் கொள்ள டோக்கன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

ரூ 1000 திட்டம்
சத்யா நகரில் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் ரூ 1000, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கி தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் பொங்கல் தொகுப்பு விநியோகத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:

என்னென்ன அறிவுரைகள்?
- ஜன.12 ஆம் தேதிக்குள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகிக்க வேண்டும்
- மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்
- 6 அடி அல்லது 6 அடிக்கு மேல் உள்ள கரும்பை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும்
இரண்டு 500 ரூபாய் தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும் - ரூ 1000த்தை சில்லறை மாற்றி வழங்கக் கூடாது
- தரமான அரிசி, சர்க்கரையை வழங்க வேண்டும்
- 100 சதவீதம் தரத்தில் எவ்வித சமரசமும் செய்து விடக் கூடாது
- கரும்புகளை ஈரச் சாக்கு போட்டுப் போர்த்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அரசு முக்கிய அறிவுரைகளை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications