கொரோனா நிவாரண தொகையை பெறாதவர்கள்.. ஜூலை 31 வரை பெற்றுக் கொள்ளலாம்.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா நிவாரண தொகையை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள் வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2ஆம் அலை தொடங்கியது. மே மாதம் மாநிலத்தில் கொரோனா 2ஆம் அலை உச்சம் தொட்டது.
மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு 35 ஆயிரம் வரை சென்றது. இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் முதல் இரண்டு வாரங்களுக்கு கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது

நிவாரண தொகை
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்தத் திட்டம் இரண்டு தவணையாகச் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல் தவணையில் மாநிலம் முழுவதும் உள்ள அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ 2000 அளிக்கப்பட்டது.

பெற முடியாதவர்கள்
அதைத் தொடர்ந்து இரண்டாம் தவணையில், 2000 ரூபாய் ரொக்கத்துடன் சேர்ந்து 14 வகையான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டன. இருப்பினும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள், ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊர் சென்றவர்கள் ஆகியோர் இந்த நிவாரண தொகையைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது.

ஜூலை 31
இந்நிலையில், கொரோனா நிவாரண தொகையான 4000 ரூபாயை இதுவரை பெறாதவர்கள் வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 99% மேலாக ரேஷன் அட்டைதாரர்கள் ஏற்கனவே நிவாரண தொகை மற்றும் மளிகை பொருள் தொகுப்பைப் பெற்றுள்ளதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

புதிய ரேஷன் அட்டைதாரர்கள்
அதேபோல மே 10ஆம் தேதி முதல் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த சுமார் 3 லட்சம் பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன என்றும் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து புதிய ரேஷன் அட்டை பெற்றவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications