தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள்.. யாருக்கு கிடைக்கும்?
சென்னை: தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளில், ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு பேருக்கு இணைப்பு வழங்கலாம் என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்புகள் வரலாம் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.
தமிழக சட்டசபையில் மின்சாரத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
தமிழகம் முழுவதும் இலவச மின் இணைப்புக்காக 4.52 லட்சம் விவசாயிகள் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். எந்தெந்த பிரிவில் எவ்வளவு பேருக்கு இணைப்பு தரலாம் என்பதை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
விஜய்சேதுபதி பட பாணி.. மகன் செய்த தடலாடி.. ஏமாந்து போன அப்பா.. மிரண்ட போலீஸ்
விவசாய மின் இணைப்பு
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1989-ல் முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்பு திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டப்படி விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு மின் இணைப்பு தாமதமாகவே வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் ஆர்வம்
தற்போதைய நிலையில் 2003 முதல் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை 4 லட்சத்து 52 ஆயிரத்து 777 விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்துள்ளனர். சாதாரண பிரிவில் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. சுயநிதிப் பிரிவில் மின் இணைப்பு பெற ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என 3 வகைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுயநிதிப் பிரிவில் கட்டணம் செலுத்தி பதிவு செய்த பிறகும் மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவாக இணைப்பு வழங்குவதற்காக 2018-ல் தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
5 குதிரை திறன்
இதில், 5 குதிரை திறன் உள்ள மின் மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.50 லட்சம், 7.50 குதிரை திறனுக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரை திறனுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரை திறனுக்கு ரூ.4 லட்சம் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் 2018, 2019-ம் ஆண்டுகளில் தலா 25 ஆயிரம் இணைப்புகளும், 2020-ல் 50 ஆயிரம் இணைப்புகளும் வழங்கப்பட்டன.
மின் இணைப்பு
தற்போதைய நிலையில் கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி இன்னும் 4 லட்சத்து 52 ஆயிரத்து 777 விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு புதிதாக ஒரு லட்சம் மின் இணைப்புகள் தரப்போவதாக அறிவித்துள்ளது,. எந்தெந்த பிரிவில் எவ்வளவு பேருக்கு இணைப்பு வழங்கப்படும் என்பது குறித்து மின் வாரிய அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
மின்வாரியம் தகவல்
தற்போதைய நிலையில சாதாரணப் பிரிவில் சுமார் 2.83 லட்சம் பேரும், சுயநிதி மற்றும் தட்கல் பிரிவில் 1.69 லட்சம் பேரும் விவசாய மின் இணைப்புக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.. தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளில், ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு பேருக்கு இணைப்பு வழங்கலாம் என்பது குறித்து விரிவான ஆய்வு நடந்து வருகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என மின்வாரியம் தரப்பில் கூறப்படுகிறது.
சிறப்பு முன்னுரிமை
இதனிடையே ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர், முன்னாள் துணை ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், கலப்பு திருமணம் செய்தோர், விதவைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் என 350 பேருக்கு சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.