குட் மார்க் வாங்கிய செயலாளர்கள்.. உற்சாகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் .. 2020ல் சிக்ஸர் அடிக்க அதிமுக பிளான்
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தொண்டர்களின் செயல்பாடும், மாவட்ட செயலாளர்கள் செயல்பாடும் மிகவும் நன்றாக இருப்பதாக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தெரிவிக்கிறார்கள்.
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தொண்டர்களின் செயல்பாடும், மாவட்ட செயலாளர்கள் செயல்பாடும் மிகவும் நன்றாக இருப்பதாக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு சாதகமாக முடிவுகள் வரலாம் என்றும் கட்சியின் கீழ்மட்ட தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பெரும் பரபரப்பிற்கும் இடைஞ்சலுக்கும் இடையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்துள்ளது. இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும்தான் தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உள்ளாட்சி தேர்தலை அதிமுக மிகவும் தைரியமாக எதிர்கொண்டது. ஆனால் திமுக தொடர் வழக்குகளை போட்டு கடைசி கட்டத்தில்தான் தேர்தலுக்கே தயார் ஆனது. இந்த வித்தியாசம் தேர்தல் முடிவிலும் எதிரொலிக்கும் என்று கூறுகிறார்கள்.
4 வண்ண சீட்டுகள்.. ஒரு உள்ளாட்சிக்கு 3 மணி நேரம்.. உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எப்படி எண்ணப்படும்?
என்ன நிலவரம்
தேர்தல் முடிந்த உடனே ஆளும் கட்சியின் செயல்பாடு குறித்தும், எதிர்க்கட்சியின் செயல்பாடு குறித்தும் முக்கிய ரிப்போர்ட் ஒன்று அதிமுகவிடம் அளிக்கப்பட்டுள்ளது. எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று அதிமுகவிற்கு ரிப்போர்ட் சென்று உள்ளது. இதை முதல்வர் பழனிசாமியும் விரிவாக சோதனை செய்துள்ளார்.
திமுக சரியில்லை
உள்ளாட்சி தேர்தலில் திமுக சரியாக செயல்படவில்லை. கடைசி வரை, திமுக தேர்தலுக்கு தயார் ஆகவில்லை. இது களத்தில் திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். மக்கள் அதிமுக பக்கம் திரும்ப இது முக்கிய காரணமாக அமையும் என்று ரிப்போர்ட்டில் கூறி உள்ளனர்.
என்ன வேகம்
அதேபோல் அதிமுகதான் உள்ளாட்சி தேர்தலுக்கு முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தலுக்கு தயார் ஆனது. இதனால் அதிமுகவிற்கு பிரச்சாரம் செய்ய நிறைய நேரம் கிடைத்தது. இதுவும் தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் என்று கூறி உள்ளனர்.
மகிழ்ச்சி
எல்லாம் போக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடு அதிமுகவின் தலைமைக்கு திருப்தியை தந்துள்ளது. பொதுவாகவே அதிமுகவில் அடிமட்ட தொண்டர்கள் திமுகவை விட தீவிரமாக பணியாற்றுவார்கள். திமுகவில் ஸ்டாலின் எல்லா பணிகளையும் செய்தால், அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் கூட தீவிரமாக செயலாற்றுவார்கள். இதை ஸ்டாலின் சில மேடைகளில் குறிப்பிட்டு புலம்பி இருக்கிறார்.
சூப்பர்
இந்த உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவில் எல்லோரும் சுறுசுறுப்பாக களமிறங்கி பணியாற்றினார்கள் என்று மூத்த உறுப்பினர்கள் பாராட்டி உள்ளனர். இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பும் நேரடியாக சில செயலாளர்களை பாராட்டி உள்ளனர். முக்கியமாக 2 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வெற்றி கொடுத்த உற்சாகத்தில் இவர்கள் செயல்பட்டார்கள் என்று கூறப்படுகிறது. புதிய மாவட்ட செயலாளர்கள் மிகவும் தீவிரமாக பணிகளை கவனித்துள்ளனர்.
அடுத்து என்ன
இதனால் இன்று நடக்கும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாசிடிவ் ரிசல்ட் வரும் என்று அதிமுக நம்புகிறது. அப்படி நடந்தால் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கு விரைவில் அதிமுக தேர்தலை நடத்த திட்டமிடும், 2020 அரசியல் இதை மையப்படுத்தியே இருக்கும் என்கிறார்கள். அதிமுகவின் இந்த தீவிர களப்பணியை திமுக தீவிரமாக கவனித்து வருகிறது.