மீண்டும் மாஸ்க் கட்டாயம்! உயரும் இன்புளுயன்ஸா.. அமைச்சர் மா.சு அதிரடி.! வேறு கட்டுப்பாடுகள் வருமா
சென்னை: தமிழகத்தில் திடீரென இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்து உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்பு நம்மை ஒரு வழியாக்கிவிட்டது. வேக்சின் உள்ளிட்ட பெரும் முயற்சிக்குப் பின்னர், இப்போது தான் கொரோனா பாதிப்பு சற்றே குறைந்து கட்டுக்குள் வந்துள்ளது.
இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் இப்போது பருவ மழை தொடங்கி இருக்கும் சூழலில் வைரஸ் திடீரென காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இன்புளுயன்ஸா காய்ச்சல்
பருவமழை தொடங்கியது முதலே மாநிலத்தில் இன்புளுயன்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகக் குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் மருத்துவமனைகளுக்குப் படையெடுத்து வருகின்றன. குறிப்பாகச் சென்னையில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதால் பலரும் மருத்துவமனைகளில் அட்மிட் ஆகி வருகின்றனர். இருப்பினும் பருவ மழைக் காலத்தில் இதுபோன்ற காய்ச்சல் பரவுவது இயல்பு என்றே வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் மாநிலத்தில் அதிகரிப்பதாகச் சொல்லப்படும் நிலையில், இது தொடர்பாகச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "காய்ச்சல் மிக அதிக அளவு எல்லாம் அதிகரிக்கவில்லை. இப்போது 1.25 லட்சம் படுக்கைகள் மாநிலத்தில் தயார் நிலையில் உள்ளது.

தனி வார்டுகள்
அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு எனத் தனியாகவே வார்டுகளை ஏற்படுத்தி உள்ளோம். மாநிலத்தில் இப்போது பரவும் இன்புளுயன்ஸா காய்ச்சலால் (H1N1 வைரஸ்) 465 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 81 பேராகும். அதேபோல 5-14 வயதுக்கு உட்பட்ட 62 சிறார்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 15-65 வயதான 223 பேருக்கும் 65 வயதுக்கு மேற்பட்ட 99 பேரும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மாஸ்க் கட்டாயம்
அவர்களில் 10 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 269 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 186 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். தலைவலி, உடல்வலி, காய்ச்சல், இருமல் அறிகுறிகள் மட்டுமே இதன் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே இருக்கும். மேலும், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்..

வேறு கட்டுப்பாடுகள்?
காய்ச்சல் ஏற்பட்டவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் போதும். அது மேலும் பரவாது என்பதால் வேறு கட்டுப்பாடுகள் தேவையில்லை. இந்த இன்புளூயன்சா காய்ச்சலுக்கு ஐரோப்பிய நாடுகளில் தனியாக வேக்சின் கூட போடுகிறார்கள். ஆனால், அது நமக்குத் தேவைப்படாது. உலகின் பல நாடுகளில் கொரோனாவுக்கு 5ஆவது டோஸ் வேக்சினும் போட்டு வருகிறார்கள். நாமும் விரைவில் வேக்சின் போட்டுக் கொள்ள வேண்டும்.

டெங்கு
தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் 4,193 சிறப்புக் காய்ச்சல் முகாம்கள் நடத்தி உள்ளோம். இதன் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலன் அடைந்து உள்ளனர். அதேபோல மாநிலத்தில் கொரோனா பாதிப்பும் கூட பெரியளவில் இல்லை. 500க்குள்ளாகவே வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை. மாநிலத்தில் டெங்கு பாதிப்பைப் பொறுத்தவரை 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பாதிப்பைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications