தீண்டாமைக்கு சாவுமணி அடித்த திரையரங்குகளிலேயே ஜாதிய பாகுபாடு- தமிழ்நாட்டுக்கு ஆகப் பெரும் தலைகுனிவு!
சென்னை: சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் இன பழங்குடி மக்கள் அனுமதிக்கப்படாத தீண்டாமை வெறியாட்டம் சமூக நீதியின் தாய்நிலம் என பெருமை பேசும் தமிழ்நாட்டுக்கு ஆகப் பெரும் தலைகுனிவு; 100 ஆண்டுகால திராவிடர் இயக்கம் இன்னமும் பயணிக்க வேண்டிய நெடும் பாதை, தந்தை பெரியார் காலத்து பிரசாரத்தின் இன்றைய கட்டாய தேவை என ஒவ்வொரு படிப்பினைகளையும் ரோகிணி திரையரங்கத்து தீண்டாமை செவுளில் அடித்து சொல்லிக் கொண்டிருக்கிறது.
சிந்துசமவெளி நாகரிகம் சீர்குலைந்த காலம்.. மனித குல வரலாற்றில் அரசு, மன்னர் முறை உருவெடுத்த தருணம்.. கைபர் போலன் கணவாய் வழிவந்த ஆரியர்கள் அரசர்கள் மூலம் செல்வாக்கு பெற்று மக்கள் வாழ்வியலில் அசைக்க முடியாத அளவுக்கு திணித்த அவலம்தான் ஜாதி. இந்திய நிலப்பரப்பில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரியமும் மனுவாதமும் கட்டமைத்து தந்த ஜாதிய ஒடுக்குமுறை கோலோச்சிக் கொண்டே இருக்கிறது.

இத்தகைய ஜாதியத்துக்கும் அதனை தாங்கி பிடிக்கும் கட்டமைப்புகள் அத்தனைக்கும் எதிரான கலகக் குரல்கள் பவுத்தம், சமணம் தொடங்கி களப்பிரர்கள், சித்தர்கள் என காலந்தோறும் வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்று கொண்டே இருந்தன. ஆனாலும் ஜாதியத்தின் பேராதிக்கத்தை குலைநடுங்க வைக்க முடியவில்லை. 100 ஆண்டுகளுக்கு முன்னர் திராவிடர் பேரியக்கத்தின் பெருந்தலைவர்கள் தொடங்கி வைத்த ஜாதி எதிர்ப்பு, பிராமணர் அல்லாதார் உரிமைப் போர் ஆகியவைதான் ஜாதிய கட்டுமானத்தை கேள்விக்குள்ளாக்கி பெரும் அசைவைக் கொடுத்தது. ஜாதிய கட்டமைப்புக்கு ஒற்றை எதிரியாக தந்தை பெரியார் தலைமையிலான திராவிடர் இயக்கமும் தமிழ்நாட்டு மக்களும் அணிதிரண்டு நின்றதால் அதன் கோரமுகம் தம்மை பதுக்கி வைத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் 2,000 ஆண்டுகால ஜாதிய அழுக்கு அப்படி எளிதாக ஒவ்வொரு மனதில் இருந்தும் உடனே போய்விடத்தான் முடியுமா என்ன?
திராவிடர் இயக்கம் தமது கொள்கை பாய்ச்சலின் பேராயுதங்களில் ஒன்றாக கலையை பயன்படுத்தியது. ஒடுக்கப்பட்ட குப்பனும் சுப்பனும் மேல்தட்டு மமதை கொண்டவாள்களும் சங்கமிக்கிற புள்ளியாக கலைக் கூடங்கள் இருந்தன. திரையரங்குகள் இதில் பிரதான பாத்திரம் வகித்தன. கலைகளில் ஜாதி பார்க்கப்படவில்லை; திரையரங்குகளில் ஜாதி பார்க்க முடியாத நிலை. இதனால் ஜாதி ஒழிப்புக்கான களமாக திரையரங்குகள் இன்றளவும் இருக்கின்றன.
ஆனால் சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்கள் ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக நேற்று அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் மனசாட்சி கொண்ட மாந்தர்களை தலைகுனிய வைக்கக் கூடியது. அதுவும் சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் தமிழர் நிலத்தில் இத்தகைய அவலக் காட்சி குற்ற உணர்ச்சியால் குறுகுறுக்க வைக்கிறது. திரையரங்க வாசலில் டிக்கெட்டை காட்டி அனுமதி கேட்கும் அந்த நரிக்குறவர் இனமக்களிடம் தமிழ் நிலம் நெஞ்சார மன்னிப்பு கேட்டுத்தான் ஆக வேண்டும்.
உலகம் உள்ளங்கை அளவு என சுருக்கிக் கொண்ட வாழ்வியலைக் கொண்ட மனிதர்கள், 2000 ஆண்டுக்கு முந்தைய சமூகப் பேரழுக்கான ஜாதியத்தை உள்ளங்களில் சுமந்து கொண்டு நிற்பது அவமானம்; ஜாதியப் பெயரை போட்டுக் கொள்ளாத இந்தியாவின் ஒற்றைமண் தமிழர் நிலம் என்ற பெருமையை சல்லி சல்லியாக உடைத்து நொறுக்கி நிற்கிறது ரோகினி தியேட்டர் நரிக்குறவர் இன பெண்களின் டிக்கெட் நீட்டல்.
சமூக நீதியின் மையமூச்சான ஜாதிய ஒழிப்பில் தமிழரும் திராவிடர் பேரியக்கமும் எத்தனை தொலைவு கடக்க வேண்டியதிருக்கிறது என சிந்திக்க வைத்திருக்கிறது ரோகிணி திரையரங்கு சம்பவம். அதேநேரத்தில் திராவிடர் பேரியக்கத்தின் நீட்சி- திராவிட மாடல் அரசாங்கம் என பெருமை பேசுகிற அரசு தமது சாட்டையை எத்தனை வலுவாக சுழற்ற வேண்டு என்கிற பாடத்தை சொல்லி இருக்கிறது ரோகிணி திரையரங்கு. வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலந்த சமூக விரோதிகளுக்கு மறக்க முடியாத பாடம் கிடைத்திருந்தால் ரோகிணி திரையரங்கு சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது என்பதை இனியேனும் நாமும் நமது திராவிட மாடல் சர்க்காரும் (அரசும்) உணர்ந்தாக வேண்டும்.












Click it and Unblock the Notifications