நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!
சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ' திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 27-1-2022 வியாழக்கிழமை(இன்று) மாலை 6 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அப்போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. அந்த வெற்றியை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தக்க வைக்க வேண்டும் என்பதில் திமுக தீவிரமாக உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய குடும்ப தலைவிகளுக்கு மாத உரிமை தொகை, பொங்கல் ரொக்க பணம் ஆகியவை வழங்கப்படாதால் மக்கள் மத்தியில் சிறிதளவு அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? திமுக கொண்டு வந்த திட்டங்களின் பட்டியலை மக்கள் மனதில் எப்படி பதிய வைப்பது? என்பது உள்ளிட்ட தேர்தல் தொடர்பான முக்கிய விஷயங்கள் இந்த கூட்டத்தில் பேசப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications