'சென்னைவாசிகள் நிம்மதியாக தூங்கப் போகலாம், கவலை வேண்டாம்..' தமிழ்நாடு வெதர்மேன் தரும் விளக்கம்
சென்னை: சென்னைக்குப் பெய்ய வேண்டிய மழை பாண்டிச்சேரி - விழுப்புரம் - திருவண்ணாமலை பெல்ட் பகுதிகளில் பெய்து வருவதால் சென்னைவாசிகள் நிம்மதியாக உறங்கச் செல்லலாம் எனத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்
சென்னை உள்பட 8 மாவட்டங்களில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இதையடுத்து சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. மேலும் முன்னெச்சரிக்கையாக நாளை சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது.
திருப்பதியிலும் விடாமல் விளாசும் மழை.. திருப்பதி-திருமலை சாலை போக்குவரத்து முடக்கம்.. பக்தர்கள் ஷாக்
ரெட் அலர்ட் எச்சரிக்கை
ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்ததால் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. மேலும், சென்னை மக்கள் 2 நாட்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைத் தயாராக வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டிருந்தது. இதனால் சென்னைவாசிகள் சற்று கலக்கம் அடைந்தனர்.
தமிழ்நாடு வெதர்மேன்
இருப்பினும், இன்று மாலை சென்னையில் எதிர்பார்த்த அளவு கனமழை இல்லை. நகரில் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் மிதமான மழை மட்டுமே பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்படவில்லை. இதற்கிடையே சென்னைக்குப் பெய்ய வேண்டிய மழை பாண்டிச்சேரி - விழுப்புரம் - திருவண்ணாமலை பெல்ட் பகுதிகளில் பெய்து வருவதால் சென்னைவாசிகள் நிம்மதியாக உறங்கச் செல்லலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்
வடக்கு உள் மாவட்டங்கள்
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கி நகர்ந்து வரும் சூழலில், வடக்கு உள் மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது, இது மேகங்கள் இல்லாத ஒரு வெற்றுக் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேக மூட்டத்தை இழந்துவிட்டதால் சென்னையில் இன்று இரவு எப்படி இருக்கும் என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்
நிம்மதியாக தூங்க போகலாம்
சென்னையில் நாளை திடீர் காற்றுடன் கூடிய மழை பெய்யும். ஆனால் அச்சுறுத்தும் வகையில் மழை எதுவும் இருக்காது. எனவே, மழை குறித்து கவலையில் உள்ளானவர்கள் இன்று நிம்மதியாக உறங்கலாம். திருவள்ளூர் பெல்ட்டில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் நீர் திறப்பு குறித்த அரசின் அறிவிப்புகளை மக்கள் முறையாகக் கவனிக்க வேண்டும்.
பாண்டிச்சேரி - விழுப்புரம் - திருவண்ணாமலை பெல்ட்
நமக்கு (சென்னைக்கு) பெய்ய வேண்டிய மழை பாண்டிச்சேரி - விழுப்புரம் - திருவண்ணாமலை பெல்ட் பகுதிகளில் பெய்து வருகிறது, இதனால் சென்னை பாதுகாப்பாக உள்ளது. வடசென்னை - திருப்பதி பெல்ட்டில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தில் காற்றின் ஊடுருவல் காரணமாக மேற்குப் பகுதியில் இருந்து பெங்களூரை வரை கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரக் காற்றழுத்த தாழ்வு நிலை போல இல்லாமல், இது பல மாவட்டங்களுக்கு நல்ல மழையைக் கொடுத்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
ரெட் அலர்ட் வாபஸ்
இதற்கிடையே சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்பப் பெறப்படுவதாகவும் அதற்குப் பதிலாக ஆரஞ்சு அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையில் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.