ஐடி ஊழியர்களே அசத்தல் செய்தி.. டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்பு
சென்னை: டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை அதிகரித்துள்ளதாக அந்தந்த நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2022 மார்ச் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் தங்கள் நிறுவனங்களின் வருவாய், செயல்பாடு குறித்து ஒவ்வொரு ஐடி நிறுவனங்களும் அறிக்கைகள் தாக்கல் செய்து வருகின்றன.
மேலும் 4 பேர்... தமிழகத்தில் அடுத்தடுத்து மின்னல் தாக்கி 11 பேர் பலி - தொடரும் சோகம்
அந்த வகையில் டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள் விவரங்கள் வெளியிட்டுள்ளன. அதில் மார்ச் 31ல் முடிவடைந்த காலண்டில் நிறுவனங்கள் ஈட்டிய லாபம், ஆட்சேர்ப்பு குறித்த முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
1 லட்சம் பேர் சேர்ப்பு
அதன்படி இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(டிசிஎஸ்) நிறுவனம் மார்ச் 31 ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.9,926 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்த காலாண்டில் மட்டும் 35,209 ஊழியர்களை நியமித்துள்ளது. மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 5,92,195 ஆக உள்ளது. கடந்த நிதியாண்டில் 40 ஆயிரம் பேரை புதிதாக நியமிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் ஒரு லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோன்று இலக்கு தான் இனியும் வைக்கப்பட்டுள்ளன'' என கூறியுள்ளது.
அலுவலகம் வந்து பணி
இதுபற்றி நிறுவனத்தின் தலைமை ஆபரேட்டிங் அதிகாரி என்ஜி சுப்பிரமணியம் கூறுகையில், ‛‛ வரும் ஆண்டில் செயல்பாடுகளுக்கு ஏற்ப கூடுதல் எண்ணிக்கையில் ஆட்களை சேர்க்க முடிவு செய்யப்படும்'' என்றார். டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான ராஜேஷ் கோபிநாதன் கூறுகையில், ‛‛நிறுவனத்தில் சீனியர் அசோசியேட்களை மீண்டும் நிறுவனம் வந்து பணி செய்ய அழைப்பு விடுத்துள்ளோம். இந்த மாதம் முதல் வாரம் மூன்று நாள் அலுவலகத்தில் பணி செய்ய உள்ளனர். முதலில் 50,000 ஊழியர்கள் அலுவலகம் வருவர். ஆண்டின் நடுப்பகுதியில் 80:20 என்ற அளவில் அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து பணி செய்வோரின் விகிதம் இருக்கும்'' என்றார்.
இன்போசிஸ் நிறுவன லாபம்
மார்ச் 31ல் முடிவடைந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் ரூ.5,686 கோடி லாபம் பெற்றுள்ளது. இந்த நிதியாண்டில் 85,000 பேர் புதிதாக பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டிலும் பணியாளர்கள் நியமனம் இந்த அளவில் தொடர உள்ளது என அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆட்சேர்ப்பு எவ்வளவு
இதுபற்றி இன்போசிஸ் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் கூறுகையில், ‛‛முடிந்த நிதியாண்டில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 85,000 பேரை புதிதாக பணியமர்த்தி உள்ளோம். இந்த ஆண்டும் குறைந்தபட்சம் 50,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். இது துவக்க மதிப்பீடு தான். நிறுவனத்தின் நிலையை பொறுத்து கூடுதலாகவும் ஆட்கள் சேர்க்கப்படும்'' என்றார். இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக் கூறுகையில், ‛‛ஐடி துறையில் பணியாளர்களின் தேவை உள்ளது. இதனால் தான் 55 ஆயிரம் பேர் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 85 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்'' என்றார்.