புழல் சிறையில் பயங்கரவாதி பிலால் மாலிக்கை பாம்பு கடித்தது.. மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி பிலால் மாலிக்கை பாம்பு கடித்தது. அவருக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பயங்கரவாதிகள் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் பல்வேறு வழக்குகளில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் பா.ஜ.க. மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு, தேசத் தலைவர்களை கொல்ல முயன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது உள்ளன.

இந்த நிலையில் இன்று காலையில் பிலால் மாலிக் சக கைதிகளுடன் சிறை வளாகத்தில் இருந்தார். அப்போது அங்கு இருந்த சாரைப் பாம்பு ஒன்று பிலால் மாலிக்கை கடித்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சக கைதிகள் ஒன்று சேர்ந்து அந்த சாரைப் பாம்பை அடித்துக் கொன்றனர். இதனை தொடர்ந்து பயங்கரவாதி பிலால் மாலிக்க்கு சிறையில் முதலுதவி சிகிச்சை கொள்ளப்பட்டது.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டதோடு, தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படுகிறது. பிலால் மாலிக் பயங்கரவாதி என்பதால் அவர் சிகிச்சை பெறும் பகுதியில் போலீஸ் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. சிறை வளாகத்தில் கைதியை பாம்பு கடித்ததால் புழல் சிறையில் பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications