பெட்ரோல், டீசல் பற்றாக்குறையா? பெட்ரோல் நிலையங்களில் குவியும் மக்கள்.. மத்திய அரசு விளக்கம்
சென்னை: ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெறும் போரின் காரணமாக பல நாடுகளில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இந்தியாவால் 24 நாட்கள் மட்டுமே சமாளிக்க முடியும் என்றும் சிலர் சமுக வலைதளங்களில் பரப்பி வருகின்றன. ஆனால் இதனை வதந்தி என்று கூறியுள்ள மத்திய அரசு, இந்தியாவில் போதுமான எரிபொருள் இருப்பில் உள்ளதாகவும், எனவே பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நெரிசலை ஏற்படுத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடந்து வருகிறது இந்த போரின் காரணமாக பல நாடுகளில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் பற்றாக்குறை இருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதனை மத்திய அரசு மறுத்து வருகிறது. பிரச்சினைக்குரிய நாடுகளைத் தவிர்த்து பிற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய மத்திய அரசு தயாராகி இருக்கிறது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85% முதல் 88% வரை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யாதான் இந்தியாவின் முதன்மையான எண்ணெய் விநியோகஸ்தராக இருந்து வந்தது. உக்ரைன் போருக்குப் பிறகு குறைந்த விலையில் எண்ணெய் கிடைத்ததால், இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சுமார் 30-35% ரஷ்யாவிடமிருந்து வாங்கியது.
ஆனால் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கவில்லை. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பல்வேறு வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. ஆனால் வளைகுடாவில் போர் நடப்பதால் கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது..
அதேநேரம் கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷ்யா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளது. இதனால் இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டது.
இதனை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை மறுபதிவு செய்தது. அந்த அறிவிப்பில் கூறுகையில், "அனைத்து குடிமக்களுக்கும் முக்கியமான ஒரு தகவல். சில இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை என்று சொல்லப்படுவது வதந்தி. இவை முற்றிலும் ஆதாரமற்றவை. இந்தியாவில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது. மேலும் வினியோகம் வழக்கம் போல் இருக்கிறது. பாரத் பெட்ரோலிய நிறுவனம் முழுமையாக செயல்படுகிறது. மேலும் தடையற்ற எரிபொருள் வினியோகத்தை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது. எனவே, தயவுசெய்து வதந்திகளை நம்ப வேண்டாம். நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நெரிசலை ஏற்படுத்தாதீர்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications