அண்டம் பற்றி விடை தெரியாத பல கேள்விகள் இருப்பதால் ஜோதிடத்திற்கு எதிராக உத்தரவிட முடியாது- ஹைகோர்ட்
சென்னை: ஜோதிடம் தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட மறுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
அண்ட சராசரம் குறித்த பல சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இன்னும் விடை காண முடியாத நிலையில், ஜோதிடம் கூடாது என்று உத்தரவிட முடியாது என்றும் ஹைகோர்ட் உறுதிபட தெரிவித்துள்ளது.
ஜோதிடம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விவரம் இதோ:

சென்னை ஹைகோர்ட்
ஜோதிடம் அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்படவில்லை என்பதால் இது குறித்து பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசுக்கும், இஸ்ரோ அமைப்புக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரி, மதுரையைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

பொது நல மனு
அந்த மனுவில்.., ஜோதிட மூட நம்பிக்கை, பல இளைஞர்களின் வாழ்க்கையை பாதித்து விடுகிறது. அவர்களை குற்றவாளிகளாக்கிவிடுகிறது. போதை அடிமைகளாகவும் மாற்றி விடுகிறது. எனவே ஜோதிடம் குறித்து அரசும், இஸ்ரோவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.

தலைமை நீதிபதி அமர்வு
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மனுதாரர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பாரட்டதக்கதாக இருந்தாலும், தனிநபரின் நம்பிக்கை சம்பந்தப்பட்டுள்ளதால், மனுதாரர் கோருவது போல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தது.

விடை காண முடியாத கேள்விகள்
இந்த பிரபஞ்சம் உருவானது குறித்த அறிவியல் என்பது ஆரம்ப நிலையில் இருக்கிறது. அண்ட சராசரம் குறித்த பல கேள்விகளுக்கு இன்னும் விடை காண முடியவில்லை. மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு, மூட நம்பிக்கை போன்ற தீமைகளை களைய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்பிக்கை இருக்கிறது, எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications