முன்னோடிகளை முந்தும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் முதல்வர் - வைரமுத்து வாழ்த்து
சென்னை: நீட்தேர்வு மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பி இறையாண்மைக்குட்பட்டு முறையாண்மை செய்திருக்கிறார் முதலமைச்சர் என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இளங்கலை மருத்துவப் படிப்புகளில் நீட் நுழைவுத் தேர்வு முறையை விலக்க கோரி தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை, 2017ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போல 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தது.
இம்மசோதா நிறைவேற்றப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார்.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு உடனே அனுப்பி வைக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வலியுறுத்தினார்.
அத்துடன் கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திடம், தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு விரைவாக ஒப்புதல் வழங்க கோரி வலியுறுத்தியது. அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்.பிக்கள் குழு சந்திக்க முடியாமல் போனது சர்ச்சையானது.

நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என் ரவி
நீட் விலக்கு மசோதாவை ஆறு மாத காலங்களுக்கு மேல் கிடப்பில் போட்டிருந்த ஆளுநர், கடந்த 1ஆம் தேதி நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார். இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த 5ஆம் தேதி மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் மீண்டும் சட்டசபையை கூட்டி நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது.

நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்
தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் நேற்று புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பாஜக எம்.எல்.ஏக்கள் மட்டும் வெளிநடப்பு செய்தனர். இதர அனைத்து கட்சிகளும் இம்மசோதாவை ஒருமனாதாக ஆதரித்ததை அடுத்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வைரமுத்து ட்வீட்
கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பதிவிட்டுள்ளார். நீட்தேர்வு மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பி இறையாண்மைக்குட்பட்டு முறையாண்மை செய்திருக்கிறார் முதலமைச்சர் என்று தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

முன்னோடிகளை முந்துகிறார்
எடுத்தது கண்டார் இற்றது கேட்டார் என்று விரைந்து வினைப்படுகிறார் என்று கூறியுள்ள வைரமுத்து முன்னோடிகளை, முந்தும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் நல்லது வாழ்க நலமே சூழ்க என்றும் வாழ்த்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து.












Click it and Unblock the Notifications