இதுக்கு எண்டே இல்லையா? அதிகரிக்கும் ஆன்லைன் ரம்மி தற்கொலை! ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கும் அன்புமணி!
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 29 பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆன்லைனில் ரம்பி விளையாட்டால் ஏற்படும் விபரீதம் குறித்து, காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இந்த விளையாட்டில் பணத்தை இழந்த சிலர், தற்கொலை செய்து கொள்வது துரதிருஷ்டவசமாக நிகழ்ந்து வருகிறது.
அப்படியொரு துயரச் சம்பவம், திருச்சியல் நிகழ்ந்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, கல்லூரி மாணவர் சந்தோஷ் என்பவர், ஆன்லைனில் ரம்மி விளையாடி ஏராளமான பணத்தை இழந்த நிலையில், மனவிரக்தியில் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திமுக தலைவர் தேர்தல் முடியட்டும்.. இன்னும் பலர் விலகுவார்கள.. ட்விஸ்ட் வைக்கும் விபி துரைசாமி!
அன்புமணி இரங்கல்
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டாக்டர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திருச்சி மாவட்டம் மலையாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
29-வது தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்திற்கு முந்தைய ஆட்சியில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட பிறகு, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கொல்லப்பட்ட 29-ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த 6 ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
பா.ம.க போராட்டம்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான பா.ம.க.வின் தொடர் போராட்டம் காரணமாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கடந்த மாதம் 26-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. ஆளுநரும் உடனடியாக அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தால், இந்த தற்கொலையை தடுத்திருக்கலாம்!
ஆளுநரே பொறுப்பு
ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னொருவர் உயிரிழந்தால் அதற்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே நான் கூறியிருந்தேன். அதை ஆளுநர் மாளிகை பொருட்படுத்தாதது தான் இன்னொரு இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமாகியிருக்கிறது என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தேவை
ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் எவரும் உயிரிழக்கக் கூடாது. அதை கருத்தில் கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.